மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும்.. இந்தியாவின் 140 கோடி மக்களும் என் குடும்பத்தினர்.. மோடி உரை
டெல்லி: இந்தியாவின் 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர் என்றும் மணிப்பூரில் விரைவில் அமைதி ஏற்படும் என்றும் மணிப்பூர் மாநில மக்களுடன் நாம் அனைவரும் இருக்கிறோம் என்றும் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார்.
நாடு முழுவதும் 77-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்று வரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு 10 ஆவது முறையாக தேசியக் கொடி ஏற்றினார். டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து விட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:-

சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த நமது வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர். இந்தியா தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும். மணிப்பூர் மாநில வன்முறைக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்படும். மணிப்பூர் மாநில மக்களுடன் நாம் அனைவரும் இருக்கிறோம். உலகத்திற்கே இந்தியா மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது.
நாட்டில் எடுத்து வரும் நடவடிக்கைகளின் தாக்கம் அடுத்த 1000 ஆண்டுகளுக்கு இருக்கும். பெண்கள், இளைஞர்களின் சக்தியே இந்தியாவின் மிகப்பெரிய பலம். வெளிநாட்டினர் நமது நாட்டிற்குள் புகுந்து செல்வ வளங்களை கொள்ளையடித்தனர். தேசத்தை வலிமையுடன் கட்டமைக்கும் பணிகளில் நமது கவனம் உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை, ஜனநாயகம்தான் நமது சக்தியின் காரணம். நாட்டின் மக்கள் தொகையும் நமது சக்திக்கு காரணமாகும்.
நாம் மேற்கொண்டுள்ள பயணத்தில் எந்த வித தடுமாற்றம் எதுவுமில்லை. நமது பயணத்தில் பாதை விலகல் கிடையாது. 30 வயதிற்கு குறைவான இளைஞர்கள் அதிகம் இருக்கின்ற நாடாக இந்தியா இருக்கிறது. உலகிலேயே இந்தியாவில் தான் 30 வயதுக்கு குறைவான இளைஞர்கள் அதிகம் உள்ளனர். இளைஞர்கள் தான் நம் நாட்டினுடைய வளர்ச்சியை வழிநடத்தி செல்கிறார்கள். இந்தியா தனது எதிர்காலத்தை தானே வடிவமைத்துக்கொள்ளும் திறனை பெற்றுள்ளது.
இந்திய நாட்டின் வளர்ச்சியை வழிநடத்துவது இளைஞர்கள் தான்.. தொழில் நுட்ப புரட்சியில் இந்தியா பெரும் பங்காற்றி வருகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை உலகநாடுகள் தெரிந்துகொள்ள விரும்புகின்றன. இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.












Click it and Unblock the Notifications