"பெகாசஸ்".. இந்தியாவில் சட்டவிரோத கண்காணிப்புகளுக்கு வாய்ப்பே இல்லை.. அமைச்சர் அஸ்வினி விளக்கம்
டெல்லி: இந்தியாவில் சட்டவிரோத கண்காணிப்புகளுக்கு வாய்ப்பே இல்லை என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் இன்று தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் உள்ள 40 செய்தியாளர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, அரசு அதிகாரிகள் மற்றும் பலரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. தி கார்டியன் உள்ளிட்ட 16 ஊடங்கங்கள் வெளியிட்டுள்ள "பெகாசஸ் புராஜக்ட்" என்ற விசாரணை கட்டுரையின் அடிப்படையில் இந்த புகார் வைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ குரூப் என்ற நிறுவனம் பெகாசஸ் ஸ்பைவேர் மூலமாக இந்திய மத்திய அரசு இவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பது, அவர்களின் மெசேஜ்களை படிப்பது உள்ளிட்ட உளவு பணிகளை மேற்கொண்டதாகவும் புகார் வைக்கப்பட்டுள்ளது.

மறுப்பு
மத்திய அரசு நேற்று இரவே இந்த புகார்களுக்கு மறுப்பு தெரிவித்து இருந்தது. இந்த பெகாசஸ் விவகாரம் இன்று இணையம் முழுக்க சர்ச்சையானதை தொடர்ந்து மக்களவை, மாநிலங்களவையில் இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசு இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெகாசஸ் சர்ச்சை குறித்து அவையில் விளக்கம் அளித்தார்.

பெகாசஸ்
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது உரையில், இந்தியாவில் சட்டவிரோத கண்காணிப்புகளுக்கு, வேவு பணிகளுக்கு வாய்ப்பே இல்லை. இந்தியாவின் சட்டம் இதற்கு அனுமதிக்காது. இந்தியாவின் சட்டமே மிகவும் பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டது. இது தொடர்பாக வெளியாகும் தகவல்கள் எதற்கும் ஆதாரம் இல்லை.

தற்செயலான விஷயமா?
நேற்று இரவு இந்த செய்தி தளம் ஒன்றில் வெளியானது. இந்த செய்தி வெளியான பின் அது தொடர்பாக பல்வேறு பெரிய புகார்கள் வைக்கப்பட்டன. ஆனால் இதில் உண்மை எதுவும் இல்லை. சரியாக மழைக்கால கூட்டத்தொடருக்கு முன் இப்படி செய்திகள் வெளியாகி உள்ளது. இது தற்செயலான விஷயம் போல தெரியவில்லை.

இதற்கு முன்
இதற்கு முன்பும் இதேபோல் பெகாசஸ் மூலம் வாட்ஸ் ஆப்பில் வேவு பார்க்கப்பட்டதாக புகார்கள் வைக்கப்பட்டது. அப்போதே இந்த புகார்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறி மறுப்புகள் வெளியிடப்பட்டது. இந்தியாவின் ஜனநாயகத்தை விமர்சிக்கும் வகையில் இந்த புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

டெக்னிக்கல் சோதனை
போனை ஆய்வுக்கு உட்படுத்தாமல், டெக்னிக்கல் சோதனை செய்யாமலே அந்த போன் ஹேக் செய்யப்பட்டது என்று கூறப்படும் புகார்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த புகாரில் உண்மை இல்லை. இந்தியாவில் சட்டவிரோதமாக எந்த விதமான கண்காணிப்பும் , யார் மீதும் எப்போதும், செய்ய முடியாது, என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications