விமானியை தாக்கிய சம்பவம்.. விமானத்தில் நடந்தது என்ன? வீடியோ வெளியிட்டவர் சொன்னது இதுதான்?
டெல்லி:இண்டிகோ விமானத்தில் விமானியை பயணி ஒருவர் தாக்கிய சம்பவத்தை வீடியோ பதிவு செய்து வெளியிட்ட ரஷ்யாவை சேர்ந்த பெண் பயணி, விமானத்திற்குள் நடந்த சம்பவம் குறித்து விளக்கமாக தெரிவித்துள்ளார்.
வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியில் வெப்ப நிலை 3 டிகிரி செல்சியஸ் வரைக்கும் நேற்று சென்றது. கடுமையான பனிமூட்டமும் நிலவுவதால் குறைந்த அளவு தூரமே கண்ணுக்கு புலப்படுகிறது. இதனால், ரயில், விமான போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. காலை நேரத்தில் வரும் ரயில்கள் தாமதமாக வந்து சேருகின்றன.

அதேபோல், விமானங்கள் தரையிறங்குவதிலும் புறப்படுவதிலும் தாமதம் ஆகின்றன. இந்த நிலையில்,
தலைநகர் டெல்லியில் இருந்து கோவா நோக்கி செல்ல இருந்த இண்டிகோ நிறுவனத்தின் 6E-2175 விமானம் பனிமூட்டம் காரணமாக தாமதமாக இயக்கப்பட்டது. பல மணி நேரமாக விமானம் தாமதமானதால் பயணிகள் கடும் அதிருப்தியில் இருந்துள்ளனர்.
இருவர் மீதும் தவறு உள்ளது: விமானம் தாமதமாக புறப்படும் என்று விமானி ஒருவர் அறிவிக்கும் போது விமானத்தின் கடைசி இருக்கையில் இருந்த பயணி ஒருவர், விமானியை தாக்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. விமானியை தாக்கிய சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. மேலும் வீடியோவை ஆதாரமாக கொண்டு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
விமானியை அடித்த பயணியின் பெயர் சஹில் கத்தாரியா என அடையாளம் தெரியவந்தது. அந்த நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனிடையே, இந்த சம்பவத்தில் இரு தரப்பிலுமே தவறுகள் இருந்ததாக விமானத்தில் பயணம் செய்த ரஷ்ய நாட்டு பெண் கூறியுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த மாடலும் நடிகையுமான எவ்ஜெனியா பெல்ஸ்கியா கூறியதாவது:-
அதிக கேள்விகளை எழுப்புகிறீர்கள்: எனது குழுவுடன் நான் கோவாவிற்கு பயணம் செய்ய இருந்தேன். விமானத்தில் ஏறுவதற்காக சீக்கிரமாகவே வந்து விட்டோம். விமானம் காலை 7.40 க்கு புறப்படுவதாக இருந்தது. விமானம் ஒரு மணி நேரம் தாமதம் என்று இண்டிகோ குழு கூறியது. ஆனால் 10 மணி வரை நேரம் தாமதம் ஆனது. அதன்பிறகே விமானத்திற்குள் ஏற அனுமதி அளிக்கப்பட்டது. விமானத்தில் ஏறிய பிறகு விமானம் மேலும் 2 மணி நேரம் தாமதம் ஆகும் எனக் கூறினார்கள்.
இதனால் கோபம் அடைந்த பயணிகள் விமானி மற்றும் சிப்பந்திகளை பார்த்து கேள்வி எழுப்பினார்கள். விமானியை தாக்கிய சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. ஆனால் இத்தகைய சூழல் ஏற்பட விமானியும் ஒரு காரணம். விமானத்திற்குள் வந்த விமானி நீங்கள் அதிகமான கேள்விகளை எழுப்புகிறீர்கள். இதனால் நமக்கான நேரத்தை தவற விட்டு விட்டோம் என்றார். தாமதத்திற்கு பயணிகளை குற்றம் சாட்டினார்" என்றார்.












Click it and Unblock the Notifications