ஷாகீன் பாக் போராட்டத்திற்கு தடை கோரி வழக்கு.. டெல்லி தேர்தல் முடிந்துதான் விசாரணை.. சுப்ரீம் கோர்ட்!
டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் நடக்கும் போராட்டத்திற்கு எதிரான வழக்கு டெல்லி சட்டசபை தேர்தல் முடிந்த பின், திங்கள் கிழமைதான் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லி: டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் நடக்கும் போராட்டத்திற்கு எதிரான வழக்கு டெல்லி சட்டசபை தேர்தல் முடிந்த பின், திங்கள் கிழமைதான் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் கல்லூரி பெண்கள் முதல் வயதான முதியவர்கள் வரை தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள். டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை அருகே இருக்கும் ஷாஹீன் பாக் பகுதி சிஏஏ போராட்டத்தின் அடையாளமாக மாறியுள்ளது.

இந்த போராட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. கடந்த ஒரு மாதமாக ஷாகீன் பாக் பகுதியில் பெண்கள் தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள். இந்த போராட்டம் முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் போராட்டம் ஆகும்.
இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். அங்கிருக்கும் மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ நந்த் கிஷோர் கார்க் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த போராட்டம் காரணமாக மக்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதேபோல் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் அமித் ஷாணி வழக்கு தொடுத்துள்ளார். ஷாகீன் பாக் போராட்டம் காரணமாக டெல்லியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.டெல்லி நொய்டா சாலையில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மக்கள் சாலையில் செல்ல முடியவில்லை.
போராட்டக்காரர்கள் சத்தமாக கூச்சல் போடுகிறார்கள். கையில் மைக்கை வைத்து கத்துகிறார்கள். பாடிக்கொண்டு இருக்கிறார்கள். இரவில் தூங்க முடியவில்லை. மாணவர்கள், முதியவர்கள் அவதிப்படுகிறார்கள் என்று அவரின் மனுவில் புகார் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதிகள் சஞ்சய் கிஷான் கவுல் , கே எம் ஜோசப் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். அதில், உங்களுடைய கோரிக்கை புரிகிறது.
நாங்கள் அதை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம். ஆனால் இப்போது இந்த வழக்கை விசாரிக்க முடியாது. இதை திங்கள் கிழமை விசாரிக்கிறோம் என்று குறிப்பிட்டனர். அதற்கு உடனே மனுதாரர்கள் தரப்பு, ஆனால் டெல்லி தேர்தல் அதற்குள் முடிந்துவிடும், டெல்லியில் சனிக்கிழமை தேர்தல் நடக்க உள்ளது என்று கூறினர்.
இதற்கு கே எம் ஜோசப் சிரித்துக் கொண்டே, பூனை குட்டி வெளியே வந்துவிட்டது பாருங்கள். ஆம் டெல்லி தேர்தலுக்காகத்தான் வழக்கை தள்ளி வைக்கிறோம். தேர்தல் முடியட்டும். அதன்பின் வழக்கை விசாரிக்கலாம். நாங்கள் தேர்தலில் தலையிட விரும்பவில்லை. அடுத்த விசாரணைக்கு வரும் போது நன்றாக தயாராகிக் கொண்டு வாருங்கள். ஏன் டெல்லி ஹைகோர்ட் போகாமல் உச்ச நீதிமன்றம் போனீர்கள் என்பதற்கு சரியான பதிலை தயார் செய்து கொண்டு வாருங்கள், என்று குறிப்பிட்டனர்.
இதனால் ஷாகீன் போராட்டக்காரர்கள் இப்போது அப்புறப்படுத்தப்பட மாட்டார்கள், தேர்தல் வரை போராட்டம் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications