சொந்த வீடு கனவை நிறைவேற்றணுமா? பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வெளியான முக்கிய அப்டேட்
டெல்லி: இந்தியாவில் சொந்தமாக ஒரு வீடு என்பது பலருக்கும் லட்சியமாகவே இருக்கும். ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் சொந்தமாக வீட்டைப் பெற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் உதவிகளை வழங்கி வருகிறது. இதற்கிடையே இந்தத் திட்டம் தொடர்பாக இப்போது மிக முக்கியமான ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் சொந்தமாக ஒரு வீடு என்பது பலரது கனவு. கல்லூரி முடித்தது முதலே பலரும் சொந்த வீடு கனவை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிடுவார்கள். இருப்பினும், அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்கள் சொந்த வீடு கனவை அடைய முடியாத ஒன்றாக மாற்றுகிறது. அதற்காகவே மத்திய மாநில அரசுகள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவி வருகிறது.
அப்படி சொந்த வீடு கட்டுவோருக்கு மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகளை வழங்கி வருகிறது. இதற்கிடையே இந்தத் திட்டம் தொடர்பாக இப்போது முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.

மிக முக்கியமான அப்டேட்
அதாவது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள தகுதியுள்ள குடும்பங்கள் இத்திட்டத்தில் பயன் பெற உதவுவதாக இருக்கிறது. பொருளாதார ரீதியாகப் பலவீனமான பிரிவுகள், குறைந்த வருமானம் கொண்டவர்கள் மற்றும் இதர நலிவடைந்த பிரிவினர் சொந்தமாக வீடுகளைக் கட்ட உதவுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 92.61 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
தகுதியுடையவர்கள் யார்?
ஒருவரின் வருமானம், ஹவுசிங் ஸ்டேடஸ் மற்றும் சமூகப் பின்னணி எனப் பலவற்றை அடிப்படையாக வைத்து இந்த திட்டத்திற்கான தகுதி முடிவு செய்யப்படுகிறது.
PMAY-நகர்ப்புறம், இதை ஆங்கிலத்தில் PMAY-U எனக் குறிப்பிடுவார்கள். இதில் பலன் பெற விண்ணப்பதாரர்களுக்கு இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் சொந்தமாக வீட்டை வைத்திருக்கக்கூடாது. பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள் என்றால் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர் என்றால் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். நடுத்தர வருமானம் கொண்டவர்கள் என்றால் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை இருக்க வேண்டும்.
மேலும், குடிசைவாசிகளும் இதில் பலன் பெறலாம். இது தவிர ரிக்ஷாக்காரர்கள், தெருவோர வியாபாரிகள், தினசரி கூலித் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விதவைகள் மற்றும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை சமூகங்கள் இதில் பலன் பெறலாம்.
கிராமப்புறங்கள்
PMAY-கிராமம், அதாவது PMAY-G என இதைச் சொல்வார்கள். இதில் சமூக-பொருளாதார மற்றும் சாதி கணக்கெடுப்பு (SECC) மூலம் அடையாளம் காணப்பட்ட கிராமப்புற குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. கிராமங்களில் சொந்தமாக வீடு இல்லாதவர்கள், இரண்டு அறைகள் வரை கொண்ட குடிசை வீடுகளில் வசிப்போர் இதில் பலன் பெறலாம்.
அதேநேரம் சொந்த வீடுகள், வாகனங்கள் அல்லது இயந்திர விவசாய உபகரணங்கள் உள்ள குடும்பங்கள், வருமான வரி செலுத்துவோர் சொத்துக்களை வைத்திருப்பவர்கள் இதில் பலன் பெற முடியாது.












Click it and Unblock the Notifications