ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி.. அமெரிக்க வர்த்தகப் போர் சமயத்தில் நடக்கும் அதிரடி சந்திப்புகள்..!
டெல்லி: ஜப்பான், சீனாவில் பிரதமர் மோடி 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். நேற்று இரவு ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி. அங்கிருந்து சீனா செல்லும் பிரதமர் மோடி, ஆகஸ்ட் 31 ஆம் தேதி அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசுகிறார்.
அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று இரவு ஜப்பான் புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி. ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்திக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ஜப்பானில் நடைபெறும் 15வது இந்தியா - ஜப்பான் வருடாந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டின் போது இருநாடுகளுக்கு இடையேயான உறவு, வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.
ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 31 ஆம் தேதி சீனா செல்கிறார். அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் உள்பட பல்வேறு தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார்.
கடந்த 2018 ஜூன் மாதத்தில் சீனாவின் குயிங்தவோ நகரில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். கடந்த 2019-ல் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சீனாவுக்கு செல்வதை பிரதமர் மோடி புறக்கணித்தார். இந்தச் சூழலில் சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க அவர் சீனாவுக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுடன் வர்த்தக போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியா, ஜப்பான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு சர்வதேச அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணம் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், "அடுத்த சில நாட்கள் ஜப்பான் மற்றும் சீனாவில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளேன். ஜப்பானில், இந்தியா - ஜப்பான் இடையிலான 15வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதுடன், அந்நாட்டு பிரதமரை சந்திக்க உள்ளேன்.
இக்கூட்டத்தில் சிறப்பு பிராந்திய மற்றும் சர்வதேச கூட்டணியை வலுப்படுத்துவது குறித்தும், பொருளாதார மற்றும் கலாசார தொடர்பை ஊக்குவிப்பது குறித்தும் விவாதிக்க உள்ளேன். தொடர்ந்து சென்டாய் நகர் சென்று செமி கண்டக்டர் ஆலையை பார்வையிட உள்ளேன்.
சீனாவில் தியான்ஜின் நகரில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டிலும் பங்கேற்க உள்ளேன். பல்வேறு சவால்களை எதிர்கொள்ள அமைப்பின் மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவேன். மாநாட்டுக்கு இடையே, அதிபர்கள் ஷி ஜின்பிங், புதின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சந்திக்க உள்ளேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications