UAE மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்! உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்
டெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் மீதான தாக்குதல்களை கண்டித்தார். மேலும் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
இது குறித்து தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பேசினேன். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீதான தாக்குதல்களை கடுமையாகக் கண்டித்தேன், இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலங்களில் இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் ஒற்றுமையாக நிற்கிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாழும் இந்திய சமூகத்தை கவனித்துக்கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தோம். பதற்றத்தைக் குறைத்தல், பிராந்திய அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னதாக காங்கிரஸ் விடுத்திருந்த அறிக்கையில் அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டிருந்த அறிக்கையில்,
"முறையான போர் அறிவிப்பு இல்லாமல், ஈரானின் உச்ச தலைவர் அலி ஹொசைனி காமேனி படுகொலை செய்யப்பட்டதை இந்திய தேசிய காங்கிரஸ் கடுமையாகக் கண்டிக்கிறது.
காமேனியின் குடும்பத்தினருக்கும், ஈரான் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள ஷியா சமூகத்தினருக்கும் காங்கிரஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்தியாவின் வெளியுறவு கொள்கை, அமைதி மற்றும் சர்வதேச சட்டங்களின் மீதான மரியாதையை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய தாக்குதல்கள் மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கைக்கு எதிரானது.
ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் தலைமைத்துவத்தை சீர்குலைக்க வலிமையைப் பயன்படுத்துவது 'ஆட்சி மாற்றும் கோட்பாடுகளின்' ஆபத்தான மீளுருவாக்கம் ஆகும். இது ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளுக்கு எதிரானது.
எந்தவொரு வெளிநாடும் மற்றொரு நாட்டின் தலைமையை தீர்மானிக்க முடியாது. இது போன்ற செயல்கள் ஏகாதிபத்தியத்திற்கு சமமானவை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications