ஆரோக்கியமும், வளமும் கிடைக்க வாழ்த்து.. பொங்கல் கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி! தமிழில் போட்ட ட்வீட்!
டெல்லி: டெல்லியில் அமைச்சர் கிஷன் ரெட்டியின் இல்லத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அனைவருக்கும் சங்கராந்தி, பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள் என தமிழில் பதிவிட்டு இருக்கிறார் பிரதமர்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் ஆகவும் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் கால்நடைகளுக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். அன்றைய தினம் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படும் நிலையில் அரசு சார்பில் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். கலை நிகழ்ச்சிகள் பறையாட்டம் என கொண்டாட்டம் களைகட்டிய நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து அங்கு காளைக்கு உணவு ஊட்டிய பிரதமர் நரேந்திர மோடி கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள், நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்து இருக்கிறார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," எனது அமைச்சரவை சகாவான திரு ஜி கிஷன் ரெட்டி அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் பங்கேற்றேன். மிகச்சிறந்த கலாச்சார நிகழ்வையும் கண்டுகளித்தேன். இந்தியா முழுவதும் உள்ள மக்கள் சங்கராந்தியையும், பொங்கல் பண்டிகையையும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.

நமது கலாச்சாரத்தின் வேளாண் பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஏராளமானதும், புதுப்பிக்கத்தக்கதுமான நன்றியின் கொண்டாட்டமாக இது விளங்குகிறது. சங்கராந்திக்கும், பொங்கல் பண்டிகைக்கும் எனது நல்வாழ்த்துகள். வரவிருக்கும் அறுவடை பருவத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன்" என கூறியுள்ளார்.













Click it and Unblock the Notifications