அமைச்சர் துரைக்கண்ணு மறைவு வேதனை அளிக்கிறது... பிரதமர் மோடி இரங்கல்..!
டெல்லி: அமைச்சர் துரைக்கண்ணுவின் திடீர் மறைவு தனக்கு வேதனையை தருவதாக பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த 13-ம் தேதியன்று சென்னையில் இருந்து சேலத்திற்கு சென்ற அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு விழுப்புரம் அருகே சென்றுகொண்டிருந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் உயர் சிகிச்சைக்காக அக்டோபர் 14-ம் தேதியன்று சென்னை அழைத்துவரப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 17 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.15 மணிக்கு காலமாகிவிட்டார்.
இதையடுத்து அவரது படத்துக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சென்னையில் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் உள்ள துரைக்கண்ணுவின் தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அரசு மரியாதையுடன் 66 துப்பாக்கி குண்டுகள் முழங்க அமைச்சர் துரைக்கண்ணு உடல் நல்லடக்கம்
இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணு மறைவு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, ''தமிழக அமைச்சர் துரைக்கண்ணு மரணம் வேதனை தருகிறது. சமுதாயத்திற்கு சேவையாற்றவும், விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கவும் குறிப்பிடத்தக்க வகையில் துரைக்கண்ணு முயற்சிகளை மேற்கொண்டார். இந்த துயரமான நேரத்தில் துரைக்கண்ணுவின் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்'' என மோடி தெரிவித்துள்ளார்.