தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்! “நீங்கள் இந்தியாவின் சாம்பியன்..” பிரதமர் மோடி ஆறுதல்!
டெல்லி: பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், மல்யுத்த விளையாட்டில் இறுதி சுற்று வரை வினேஷ் போகத் முன்னேறியிருந்த நிலையில் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மோடி வினேஷுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பங்கேற்றிருந்த வினேஷ் போகத், காலிறுதி போட்டியில் நடப்பு உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனையை தோற்கடித்து அரையிறுதியில் நுழைந்தார். அங்கும் வெற்றிபெற்று இறுதி போட்டியில் நுழைந்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு மல்யுத்த போட்டியில் வெள்ளி உறுதி செய்யப்பட்டது. அதேபோல இறுதி போட்டியில் வென்றால் தங்கம் கிடைக்கும்.

இப்படி இருக்கையில் 50 கிலோ எடை பிரிவில் அவர் விளையாட இருந்த வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். 50 கிலோ எடை பிரிவில் விளையாட 50 கிலோ மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் வினேஷ் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வினேஷுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்திருக்கிறார். தனது x பக்கத்தில், "வினேஷ் நீங்கள் இந்தியாவின் சாம்பியன். நீங்கள் இந்தியாவின் பெருமை. ஒவ்வொரு இந்தியருக்கும் வினேஷ் போகத் உத்வேகம் அளிப்பவராக இருக்கிறார். இந்த பின்னடைவு வேதனை அளிக்கிறது. எனது வருத்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை" என்று மோடி கூறியுள்ளார்.
வினேஷ் தகுதி நீக்கம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்திய நிலையில், மதியம் 3 மணியளவில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கமளிக்க இருக்கிறார்.












Click it and Unblock the Notifications