வரியா விதிக்கிறீங்க.. அமெரிக்காவுக்கு உ.பி.யிலிருந்து மோடி கொடுத்த மறைமுக பதிலடி! அசரப்போவது இல்லை
ரஷ்யா-உக்ரைன் மோதலில் விளாடிமிர் புடினுக்கு அழுத்தம் கொடுக்கும் உத்தியின் ஒரு பகுதியாக, அமெரிக்கா தனது இந்தியக் கொள்கையை மாற்றியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் BRICS அமைப்பில் பங்கேற்பது மற்றும் ரஷ்யாவுடனான தொடர்ச்சியான உறவுகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். "இந்தியா, ரஷ்யா இருவரும் வீழ்ச்சியடைந்த பொருளாதார நாடுகள்" என்று அவர் வெளிப்படையாகக் கூறியது இந்தியாவை கர்ஜிக்க தூண்டியுள்ளது.
எனவேதான், அமெரிக்காவின் இந்த அழுத்தம் மற்றும் வர்த்தக எச்சரிக்கைகளுக்கு மத்தியில், இந்தியா தனது நிலைப்பாட்டை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் 25% வரி விதிப்பு மற்றும் கூடுதல் அபராதம் தொடர்பான எச்சரிக்கைகளை புறக்கணித்துள்ளார். உள்நாட்டுப் பொருட்களை வாங்குமாறு மக்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். மேலும், மோடி அரசு ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல்களை நிறுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய நிச்சயமற்ற சூழலில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார். டிரம்ப் நிர்வாகம் இந்திய ஏற்றுமதிகளுக்கு 25% வரி விதித்திருந்த நிலையில், மோடியின் இந்த கருத்து ஒரு பொதுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மோடி பேச்சு
சனிக்கிழமை உத்தரபிரதேசத்தில் நடந்த பேரணியில் மோடி பேசுகையில், "உலகப் பொருளாதாரம் பல அச்சங்களுக்கு உள்ளாகியுள்ளது; ஸ்திரமற்ற ஒரு சூழல் நிலவுகிறது. இனி நாம் எதை வாங்கினாலும், ஒரே ஒரு அளவுகோல் மட்டுமே இருக்க வேண்டும்: இந்தியரின் வியர்வையால் உருவாக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்குவோம்" என்று கூறினார்.
உள்நாட்டு உற்பத்தி மற்றும் நுகர்வை வலுப்படுத்துவதில் மோடியின் தற்போதைய கவனம், அவரது "மேக் இன் இந்தியா" திட்டத்துடன் இசைந்து போகிறது. அமெரிக்க வரி விதிப்புகள் செயல்படுத்தப்பட்ட பிறகு, இந்த அணுகுமுறை அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. "நமது விவசாயிகளின் நலன்கள், நமது சிறு தொழில்கள் மற்றும் நமது இளைஞர்களின் வேலைவாய்ப்பு ஆகியவை மிக முக்கியத்துவம் வாய்ந்தவை" என்றும் மோடி அங்கு தெரிவித்தார்.

ரஷ்ய எண்ணெய் கொள்முதல்களை நிறுத்தும்படி இந்திய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்த இறக்குமதிகளை நிறுத்துவது தொடர்பான எந்த முடிவும் இறுதி செய்யப்படவில்லை. அரசுக்குச் சொந்தமான மற்றும் தனியார் சுத்திகரிப்பு ஆலைகள் தங்கள் விருப்பமான சப்ளையர்களைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைக் கொண்டுள்ளன.
அமெரிக்க ஊடகத்திற்கு சொல்லியாச்சு
கச்சா எண்ணெய் கொள்முதல் என்பது ஒரு வணிக முடிவு. டிரம்பின் சாத்தியமான தடைகள் இருந்தபோதிலும், இந்தியா ரஷ்ய கச்சா எண்ணெயைத் தொடர்ந்து வாங்கும் என்று இரு மூத்த இந்திய அதிகாரிகள் நியூயார்க் டைம்ஸ் செய்தி ஊடகத்திற்கு கடந்த, சனிக்கிழமை தெரிவித்தனர்.
சீனா, ரஷ்யாவின் முக்கிய பொருளாதார மற்றும் ராஜதந்திர கூட்டாளியாக இருக்கும் நிலையில், அமெரிக்க உயர்தொழில்நுட்ப உற்பத்திக்கான அரிய-பூமி காந்தங்களை சீனா கட்டுப்படுத்துவதால், உலகப் பொருளாதாரம் மீதான டிரம்பின் செல்வாக்கு குறைவாகவே உள்ளது. இரு நாடுகளும் முன்னதாக ஒருவருக்கொருவர் 100% க்கும் அதிகமான வரிகளை விதித்த பின்னர், சமீப மாதங்களில் அமெரிக்க-சீனா உறவுகளை மேம்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

இந்தியா, ரஷ்யாவுடன் தனது வலுவான உறவைப் பேணி வருகிறது. பனிப்போர் காலத்திலிருந்தே ரஷ்யா இந்தியாவின் ஒரு முக்கிய ஆயுத சப்ளையராக உள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இந்த உறவு ஒரு "நிலையான மற்றும் எல்லா வகையான காலத்திலும் சோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட கூட்டாண்மை" என்று குறிப்பிட்டார்.
பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகள் சுதந்திரமானவை என்றும், மற்றொரு நாட்டின் பார்வையில் அல்லாமல், அவற்றின் சொந்த தகுதியின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் ஜெய்ஸ்வால் வலியுறுத்தினார். அமெரிக்காவுடனான உறவுகள் குறித்து, நேர்மறையான முன்னேற்றம் தொடரும் என்பதில் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்க பிரதிநிதிகள் வருகை
இருதரப்பு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளுக்காக, அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையாளர்கள் ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவுக்கு வருகை தருவார்கள் என்று புது டெல்லியில் உள்ள ஒரு மூத்த அதிகாரி வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினார். அரசியல் மற்றும் மதக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கா தனது பால் மற்றும் விவசாயத் துறைகளில் நுழைவதைத் தடுக்கும் தனது நிலைப்பாட்டை இந்தியா பராமரிக்கும் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவின் புதிய ராஜதந்திர நிலைப்பாடு, அதன் முந்தைய கொள்கையிலிருந்து குறிப்பிடத்தக்க மாறுதலைக் காட்டுகிறது. சீனா மீதான செல்வாக்கைச் சமநிலைப்படுத்த இந்தியாவை கூட்டாளியாகக் கருதியது அமெரிக்கா. ஆனால் இப்போது ரஷ்ய உறவு, திடீரென அமெரிக்காவுக்கு கசக்க ஆரம்பித்துள்ளது. ஆனால், இந்தியாவில் பிறந்த குழந்தைக்கு கூட தெரியும், இந்தியாவின் நட்பு நாடு ரஷ்யாதான் என்பது என்று பிரதமர் மோடி சில வருடங்கள் முன்பு கூறியது இப்போது மறுபடியும் உண்மையாகியுள்ளது.












Click it and Unblock the Notifications