பற்றி எரியும் மணிப்பூர்.. 45+ நாட்களாக தொடரும் வன்முறை! மன் கீ பாத் உரையில் பிரதமர் மோடி மவுனம்
டெல்லி: மணிப்பூரில் அமைதி திரும்பப் பிரதமர் நரேந்திர மோடி குரல் கொடுக்க வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்திய போதிலும், இன்றைய மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அது குறித்து எதுவும் பேசவில்லை.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் சில வாரங்களாகவே வன்முறை தொடர்ந்து வருகிறது. இதனால் அங்கே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த மாநிலமே பற்றி எரியும் நிலையில், பல இடங்களில் உயிரிழப்புகளும் கூட நிகழ்ந்துள்ளது. அங்கே இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கலவரம்: மணிப்பூரில் மைத்தேயி இன மக்கள் தங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், பெரும்பான்மையாக இருக்கும் மைத்தேயி இன மக்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்டால் அது தங்களுக்குப் பாதிப்பு எனக் குக்கி தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒட்டுமொத்த மணிப்பூர் மாநிலத்திலும் வன்முறை சூழ்ந்துள்ளது.
வன்முறையைக் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் பலன் தருவதாக இல்லை. அங்குள்ள அரசியல்வாதிகளும் கூட இந்த வன்முறையில் இருந்த தப்ப முடியவில்லை. மத்திய அமைச்சர் தொடங்கிய பல வீடுகளுக்கும் கூட வன்முறையாளர்கள் தீ வைத்தனர். மேலும், சில இடங்களில் அரசியல்வாதிகள் மீது தாக்குதல் சம்பவங்களும் கூட நடைபெற்றுள்ளன. பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் சம்பவங்களும் கூட அரங்கேறின.
எதிர்க்கட்சிகள்: மாநிலம் முழுக்க பல அசம்பாவிதங்கள் அரங்கேறியுள்ளன. ராணுவம், அசாம் ரைபிள்ஸ், விரைவு அதிரடிப் படை மற்றும் மாநில போலீசார் என பல்வேறு தரப்பினரும் குவிக்கப்பட்ட போதிலும், இன்னும் அங்கே அமைதி திரும்பவில்லை. மணிப்பூரில் அமைதியைக் கொண்டு வருவதில் மணிப்பூர் அரசும், மத்திய அரசும் தவறிவிட்டதாகக் காங்கிரஸ் விமர்சிக்கத் தொடங்கியுள்ளது. பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி மணிப்பூர் பாஜக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தியுள்ளார்.
அங்கு சுமார் 45 நாட்களுக்கு மேலாக வன்முறை தொடரும் நிலையில், பிரதமர் மோடி இது குறித்துப் பேசாமல் அமைதி காப்பது ஏன் எனக் காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. அக்கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், "மன் கீ பாத்தின் 100 எபிசோட்களை கேட்டுவிட்டோம். இந்த முறை அது மணிப்பூர் கி பாத்தாக இருக்கட்டும். மோடி தனது மவுனத்தைக் கலைத்து மணிப்பூரில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக வேண்டுகோள் விடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
பிரதமர் மோடி வன்முறை: மேலும், பல எதிர்க்கட்சிகளும் பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை குறித்துப் பேச வேண்டும் என வலியுறுத்தினர். மணிப்பூரில் அமைதி திரும்பப் பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கிடையே இன்று 102ஆவது மன் கீ பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. அதில் பிரதமர் மோடி கடைசி வரை மணிப்பூர் வன்முறை குறித்து எந்தவொரு கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.
பிரதமர் மோடி இன்று தனது மன் கீ பாத் உரையில் 1975இல் கொண்டு வரப்பட்ட எமர்ஜென்சி குறித்துப் பேசினார். ஜனநாயகத்தின் தாயாக விளங்கும் இந்தியாவில் எமர்ஜென்சி ஒரு கறுப்பு நாளாகவே இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், புயல் வெள்ளம் போன்ற காலங்களை இப்போது சிறப்பாக நாம் எதிர்கொள்வதாகவும் பேரிடர் மீட்புப் படையினரின் திறன் கடந்த சில ஆண்டுகளில் வெகுவாக முன்னேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், அவர் கடைசி வரை மணிப்பூர் வன்முறை குறித்து எதுவும் பேசவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்












Click it and Unblock the Notifications