அழைத்த மோடி.. இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.. குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர்?
டெல்லி: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததாக அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.
ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தனர். அப்போது உலக நாடுகளின் தலைவர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்தினர். அந்தவகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், பிரதமர் மோடியும் சந்திப்பு மேற்கொண்டனர். இருதரப்பு சந்திப்பின் போது, அடுத்த ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி அழைத்ததாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார்.

குவாட் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று ஒரு நிகழ்வில் பங்கேற்ற இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியிடம், 2024 குடியரசு தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள குவாட் நாடுகளின் தலைவர்களை அழைப்பது குறித்து இந்தியா பரிசீலித்து வருவது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும், இந்தியா தனது குடியரசு தின விழாவில் பங்கேற்க உலகத் தலைவர்களை அழைப்பது வழக்கம். இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கோவிட்-19 தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் குடியரசு தினத்திற்கு உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்கவில்லை.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழாவில், அப்போதைய பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தலைமை விருந்தினராக இருந்தார். 2019 இல், தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா அணிவகுப்பில் தலைமை விருந்தினராக இருந்தார், அதே நேரத்தில் 2018 இல் அனைத்து 10 ஆசியான் நாடுகளின் தலைவர்களும் இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர்.
2017 ஆம் ஆண்டில், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் குடியரசு தின கொண்டாட்டங்களில் முதன்மை விருந்தினராக இருந்தார். 2016 ஆம் ஆண்டில் அப்போதைய பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டே இந்த நிகழ்வை சிறப்பித்தார். 2015ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, குடியரசு தின அணிவகுப்பைப் பார்வையிட்டார்.
2014ஆம் ஆண்டில், அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே குடியரசு தின கொண்டாட்டங்களில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். 2013ல் பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் குடியரசு தின நிகழ்வில் கலந்து கொண்டு, அணிவகுப்பைப் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications