அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் போனில் உரையாடிய பிரதமர் மோடி.. இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்த ஆலோசனை!
இந்தியா அமெரிக்கா இடையிலான உறவை வலுப்படுத்த பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லி : இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார். இந்தியாவில் விரிவடைந்து வரும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையால் ஏற்படும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு போயிங் மற்றும் பிற அமெரிக்க நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம், பிரான்சின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 சிவில் விமானங்களையும், அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களையும் வாங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசி வாயிலாக உரையாடிய இந்திய பிரதமர் மோடி, இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்புறவு குறித்து திருப்தி தெரிவித்தார்.

போயிங் விமானங்கள்
ஏர் இந்தியா விமான நிறுவனம், பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 சிவில் விமானங்களையும், அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களையும் வாங்க உள்ளது. அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து 20 போயிங் 787 ரக விமானங்கள் உட்பட 220 போயிங் விமானங்கள் வாங்கப்படுகின்றன. இதற்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. புதிய விமானங்களை வாங்குவதற்கான அறிவிப்பு வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

மோடி - ஜோ பைடன்
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்கள் ஆலோசித்தனர். இந்தியா அமெரிக்கா இடையேயான உறவின் வலிமை குறித்து பிரதமர் நரேந்திர மோடி திருப்தி தெரிவித்துள்ளார். அனைத்து துறைகளிலும் இரு நாடுகளின் உலகளாவிய கூட்டாண்மை குறித்தும் அவர் திருப்தி தெரிவித்துள்ளார்.

போனில் பேச்சு
இந்தியாவின் டாடா சன்ஸ் குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனம் 220 விமானங்கள் வாங்குவதற்கு அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள ந்லையில், இரு நாடுகளின் தலைமையின் கீழ் ஏர் இந்தியா மற்றும் போயிங் இடையே கையெழுத்தான முக்கிய ஒப்பந்தம் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளிலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று இரு தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

ஆலோசனை
இந்திய பிரதமர் மோடி, ஜோ பைடனுடன் பேசுகையில், போயிங் மற்றும் பிற அமெரிக்க நிறுவனங்களை இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தியதாக பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையேயான ஆலோசனை சிறப்பான முறையில் நடைபெற்றதாகவும், இரு நாட்டு மக்களுக்கும் இடையே பரஸ்பர உறவுகளை வலுப்படுத்த இரு நாட்டு தலைவர்களும் விரும்புகின்றனர் என்றும் பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

கூட்டாண்மையின் வலிமை
ஏர் இந்தியா மற்றும் போயிங் இடையேயான ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட விமானங்களை வாங்குவது அமெரிக்க-இந்தியா பொருளாதார கூட்டாண்மையின் வலிமையை பிரதிபலிக்கிறது, அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்குகிறது என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications