நம்பிக்கையில்லா தீர்மானம்! அன்றே கணித்த பிரதமர் மோடி! 4 ஆண்டுக்கு முன்பே கிண்டல்! எப்படிங்க-வீடியோ
டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸ் ஏற்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் 2023ல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என 4 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 2019லேயே பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் கணித்து கூறிய வீடியோ தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் வன்முறை ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கி உள்ளது. குக்கி-மைத்தேயி பிரிவு மக்களின் இந்த மோதல் எல்லை மீறியது. கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் இரண்டரை மாதத்துக்கும் மேலாக இந்த வன்முறை தொடர்கிறது.

வன்முறையின்போது குக்கி பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நடந்தது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே தான் மணிப்பூர் வன்முறை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிரொலிக்க தொடங்கி உள்ளது.
அதாவது மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இதற்கு ஆளும் தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிப்பார் என கூறி பாஜக தரப்பில் கூறப்படுகிறது. இது எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதுதொடர்பாக இன்று 5வது நாளாக நாடாளுமன்ற சபைகள் முடங்கி உள்ளன.
இதற்கிடையே தான் இன்று நாடாளுமன்ற லோக்சபாவில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸை காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் வழங்கின. காங்கிரஸ் சார்பில் கவுரவ் கோகாய் கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸ் கொண்டு வந்தார். அதனை சபாநாயகர் ஏற்றுள்ளார். விரைவில் இதுபற்றி விவாதிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் தான் 2023ல் நாடாளுமன்றத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என பிரதமர் மோடி 5 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2018 ல் கணித்து கூறிய தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
அதாவது கடந்த 2018ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆந்திராவில் செயல்படும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்தது. இதற்கு காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.
அதன்பிறகு 2019 பிப்ரவரி 7 ம்தேதி பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர், ‛‛நாங்கள் சேவை செய்து இங்கே ஆளும் கட்சியாக அமர்ந்து இருக்கிறோம். ஆனால் ஆணவத்தின் விளைவால் தான் 400ல் இருந்து 40 உறுப்பினர்களுடன் (மறைமுகமாக காங்கிரஸை விமர்சனம்)இங்கு வந்துள்ளீர்கள். இன்றைய சூழலில் நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என பார்த்து கொள்ளுங்கள்.
அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்க விரும்புகிறேன். 2023ல் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் செயல்படுங்கள்'' என பிரதமர் மோடி சிரித்தபடி தெரிவித்து இருந்தார். அதாவது 2018 ல் தனது அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் முறியடித்ததை மனதில் வைத்து பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கிண்டல் செய்திருந்தார்.
இந்த வீடியோ தான் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே தான் பிரதமர் மோடி அன்று கூறியபடியே தற்போது 2023ம் ஆண்டில் மணிப்பூர் வன்முறையை காரணமாக வைத்து எதிர்க்கட்சிகள் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை பாஜகவினர் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications