தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மோடி மீது குற்றச்சாட்டு.. புகாரை ஆராய தேர்தல் ஆணையம் முடிவு!
டெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து, எதிர்க்கட்சிகளை விமர்சித்து சமீபத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இது அப்பட்டமான தேர்தல் விதி மீறல் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், புகாரை ஆராய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்புத் திருத்த மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அந்த உரையில், மசோதாவைத் தோற்கடித்ததற்காக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைக் கடுமையாக விமர்சித்தார். அவர்கள் பெண் கருக்கொலை செய்துள்ளதாகவும், அதற்கான தண்டனையை பெண்கள் வழங்குவார்கள் என்றும் கூறினார். மேலும், இந்தத் தோல்விக்காகப் பெண்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட அவர், பெண்களின் அதிகாரமளிப்புக்கான முயற்சிகள் தொடரும் என உறுதியளித்தார்.
எல்லாம் ஓகேதான், ஆனால் தேர்தல் நடந்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி பேசுவது, விதிமீறல் என்று எதிர்க்கட்சிகள் கொந்தளித்திருந்தன.
இடதுசாரி கட்சிகளான CPI(M) மற்றும் CPI ஆகியவை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், அரசு ஊடகமான தூர்தர்ஷனை அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தியது விதிமீறல் என்று இக்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன.
ஆளும் கட்சி, அரசு இயந்திரத்தைத் தனது அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் என்ற ஜனநாயகத்தின் அடிப்படைக்கே எதிரானது என CPI(M) பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி குற்றம் சாட்டியுள்ளார்.
மறுபுறம் இடதுசாரி கட்சிகள் தவிர, டி.எம்.கிருஷ்ணா உட்பட சுமார் 700 ஆர்வலர்கள், மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை, தேர்தல் ஆணையத்தின் MCC பிரிவு பரிசீலிக்கும் என்று ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் தேர்தல் நடத்தை விதிகள் மார்ச் 15 முதல் மே 4 (வாக்கு எண்ணிக்கை நாள்) வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் உரை நிகழ்த்தப்பட்டபோது, அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்திருந்தது. ஆனால், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவிருந்த சூழலில் இந்த உரை ஆற்றப்பட்டது. எனவே, இது வாக்காளர்களைத் திசைதிருப்பும் முயற்சி என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.












Click it and Unblock the Notifications