"கோழைத்தனமானது" கனடாவில் இந்து கோயில் மீதான தாக்குதல்.. பிரதமர் கண்டனம்! ட்ரூடோ அரசு குறித்தும் பரபர
ஒட்டாவா: கனடாவில் உள்ள இந்து கோயில் ஒன்றின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியத் தூதரக அதிகாரிகள் அந்த கோயிலுக்குள் இருந்த போதே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தத் தாக்குதலுக்குப் பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருந்த நல்லுறவு கடந்த சில மாதங்களில் மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. கனடாவில் இருந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கனடா குற்றஞ்சாட்டியதே இதற்கு காரணம்.

மத்திய அரசு இந்த குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், இதில் ஆதாரத்தைத் தரும்படியும் மத்திய அரசு கேட்டது. இருப்பினும், ஆதாரத்தைத் தராமல் கனடா அரசு வெறுமன குற்றஞ்சாட்டி மட்டுமே வந்தது.
கண்டனம்: இந்தச் சூழலில் கடந்த வாரம், கனடாவில் உள்ள ஒன்ராறியோ (Ontario) என்ற பகுதியில் உள்ள பிராம்ப்டன் என்ற பகுதியில் உள்ள ஒரு கோயிலில் இந்தியத் தூதரகம் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அப்போது திடீரென அந்த கோயில் நுழைவாயில் அடையாளம் தெரியாத நபர்களால் தேசப்படுத்தப்பட்டது. இந்திய தூதர்கள் இருந்த போதே நடந்த இந்தத் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொடங்கி அந்நாட்டிலேயே பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையே கனடாவில் உள்ள இந்து கோயில்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கனடாவில் இந்துக் கோயில்கள் மீது வேண்டும் என்றே திட்டமிட்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அவர் சாடினார். கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகள் நடந்து வருவதாகவும் அவர் சாடினார்.
பிரதமர் மோடி: இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "கனடாவில் இந்து கோவில் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். தூதரக அதிகாரிகளை மிரட்டும் கோழைத்தனமான நடவடிக்கைகள் மோசமானது. அதேநேரம் இது போன்ற வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசு நீதியை உறுதிசெய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார்.
வெளியுறவுத் துறை அமைச்சர்: முன்னதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் இந்த தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து இருந்தது. தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்ட வன்முறைச் செயல்களைக் கண்டிப்பதாகவும் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் உரியப் பாதுகாப்பு வழங்கப்படுவதைக் கனடா அரசு உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இது போன்ற வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றும் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பதால் கனடாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொள்வதாகவும் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications