ராமேஸ்வரத்தில் ராமநவமி நாளில் பாம்பன் புதிய ரயில் பாலம்.. தமிழில் பதிவிட்டு பிரதமர் மோடி நெகிழ்ச்சி
டெல்லி: பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை தருகிறார். இந்த நிலையில், தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன் என்றும், ஸ்ரீ அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன் என்றும் பிரதமர் மோடி தமிழில் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் பாம்பன் ரயில் பாலம் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. 2 ஆயிரம் கிமீ தூரத்துக்கு கடலில் அமைக்கப்பட்ட இந்த பாலம் தன் உறுதித்தன்மையை இழந்ததால், தற்போது இதில் புதிதாக ரயில் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்தன.

சுமார் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பாலம் அமைக்கும் பணி நடந்து வந்தது. தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பருடன் பணிகள் முழுவதும் முடிவடைந்தது, இதையடுத்து சோதனை முறையில் ரயில் இயக்கப்பட்டது. தொடர்ந்து 5 கட்டங்களாக இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தூக்குப் பாலத்தின் வழியாக கப்பல்களும் இயக்கி சோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை தருகிறார். மத்திய பாஜகவின் கனவுத்திட்டமாக அறியப்படும் நிலையில், நாளை பிரதமர் மோடி இந்த பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க உள்ளார். மேலும் ராமேஸ்வர கோயிலில் சாமி தரிசனம் செய்து பிரார்த்தனை செய்ய உள்ளார்.
இதற்கிடையே இன்று 'தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்' என்று பிரதமர் மோடி தமிழில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நாளை, ஏப்ரல் 6ஆம் தேதி, புனிதமான ராம நவமி நாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. ஸ்ரீ அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் தொடங்கி வைக்கப்படும் அல்லது அடிக்கல் நாட்டப்படும். இவ்வாறு மோடி ட்வீட் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications