உ.பி. தேர்தல்: அடிக்கிற குளிரிலும் அசராமல் குவிந்த வாக்காளர்கள்.. பெருமையாக வாழ்த்து தெரிவித்த மோடி
லக்னோ: உத்தர பிரதேச மாநில முதற்கட்ட தேர்தலில் குளிரையும் பொருட்படுத்தாமல் ஓட்டளித்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. யோகி ஆதித்யநாத் முதல்-மந்திரியாக உள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான இங்கு 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பிப்.,10, 14, 20, 23, 27, மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.

பாஜக, சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே களம் காண்கின்றன. ஆட்சியை தக்க வைக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேநேரத்தில் இழந்த ஆட்சியை கைப்பற்ற அகிலேஷ்யாதவின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரசும் மாநிலத்தில் செல்வாக்கை நிரூபிக்க முயற்சித்து வருகிறது. இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவினாலும் கூட நேரிடையான மோதல் என்பது பாஜக, சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே தான் இருக்கிறது.
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி முதற்கட்ட தேர்தல் இன்று (பிப்.,10) ஷாமிலி, ஹாபூர், கவுதம் புத் நகர், முஸாபர்நகர், மீரட், பாக்பாட், காசியாபாத், புலன்ட்சார், அலிகர், மதுரா, ஆக்ரா ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு நடக்கிறது. மொத்தம் 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.27 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் சாகரன்பூரில் பிரதமர் நரேந்திர மோடிதேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் முதற்கட்ட தேர்தலில் ஓட்டளிக்கும் மக்கள் குறித்து பெருமையாக பேசினார். அவர் பேசுகையில், ‛‛மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் முதற்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது. காலையில் குளிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் அதிகமாக ஓட்டளிக்க சென்றனர். அனைவருக்கும் பாராட்டுக்கள்'' என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications