தமிழ்நாட்டில் லுலு மாலை எதிர்க்கும் அண்ணாமலை.. உரிமையாளர் யூசுப் அலியை நேரில் பாராட்டிய பிரதமர் மோடி
டெல்லி: தமிழ்நாட்டில் லுலு மாலை அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை லுலு குழும உரிமையாளர் யூசுப் அலி நேரில் சந்தித்து பேசினார்.
கடந்த மார்ச் மாத இறுதியில் 4 நாள் அரசு முறை பயணமாக துபாய் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழிலதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்த்தார்.
அதன் ஒரு பகுதியாக கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் யூசுப் அலிக்கு சொந்தமான லுலு இண்டெர்நேஷனல் குழுமம் தமிழ்நாட்டில் ரூ.3,500 கோடியை முதலீடு செய்ய உள்ளது.

லுலு குழுமம்
கேரளாவின் கொச்சின் உட்பட உலகம் முழுவதும் 22 நாடுகளில் 230 பிரம்மாண்ட மால்களை நடத்தி வரும் லுலு குழுமம் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் மால்களை தொடங்க திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி வரும் 2024 ஆம் ஆண்டு சென்னையில் புதிய மால் ஒன்றை தொடங்க லுலு குழுமம் முடிவு செய்து இருக்கிறது.

அண்ணாமலை எதிர்ப்பு
இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை லுலு ஹைபர் மாலை தமிழ்நாட்டில் தொடங்க அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்து இருக்கிறார். இந்த விவகாரத்தில் சிறு வணிகர்களுக்கு பாஜக ஆதரவாக இருக்கும் என்று தெரிவித்துள்ள அண்ணாமலை, லுலு மாலின் ஒரு செங்கல்லை கூட தமிழ்நாட்டில் வைக்க பாஜக அனுமதிக்காது என்றார்.

வணிகர்கள் காணாமல் போவார்கள்
பாஜக எந்த நிறுவனத்துக்கும் எதிரான கட்சி இல்லை. ஆனால் லுலு நிறுவனத்தால் வணிகர்கள் காணாமல் போய்விடுவார்கள். துபாயில் கூட லுலு நிறுவனத்தை வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சிறு வியாபாரிகளை அழைத்து பெரிய நிறுவனங்களை அமைக்கும் நோக்கில் இருக்கும் லுலுவை பாஜக தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்காது என்றார்.

பிரதமருடன் சந்திப்பு
இதனிடையே டெல்லி சென்ற லுலு குழும உரிமையாளர் யூசுப் அலி பிரதமர் இல்லத்தில் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது கேரளா மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் லுலு குழுமம் மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் விளக்கமளித்தார். இதனை கேட்ட பிரதமர் மோடி, உணவு துறையில் லுலு குழுமத்தின் பங்களிப்பை வெகுவாக பாராட்டினார்.












Click it and Unblock the Notifications