நண்பருக்காக கலங்கிய பிரதமர் மோடி.. டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு தாக்குதல் குறித்து வேதனை!
டெல்லி: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபரும், நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப், பென்சில்வேனியாவில் பிரச்சாரம் ஒன்றில் பேசியபோது மர்ம நபர் ஒருவர் டிரம்ப்பை துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்பின் வலது காதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் சொட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அமெரிக்காவின் சீக்ரெட் சர்வீஸ் தகவலின்படி, டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொல்லப்பட்டார். அதேசமயம், டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூட்டால் பேரணியில் பங்கேற்ற ஒருவர் உயிரிழந்தார், மேலும் இரண்டு பார்வையாளர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் ஒரு படுகொலை முயற்சியாக விசாரிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது போன்ற சம்பவத்திற்கு அமெரிக்காவில் இனி இடம் இல்லை. இந்த சம்பவத்திற்கு எதிராக ஒரே தேசமாக நாம் ஒன்றிணைய வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தனது நண்பரான டிரம்ப் மீதான தாக்குதலால் வேதனை அடைவதாக பிரதமர் மோடி வருத்தத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
"எனது நண்பரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதலால் ஆழ்ந்த கவலையடைகிறேன். இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்" என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், "எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் அமெரிக்க மக்களுடன் உள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications