லோக்சபா 'ஃபேர்வெல் டே' உரையிலும் விடவில்லை.. ராகுல் காந்தியை கிண்டல் செய்த நரேந்திர மோடி!
டெல்லி: 16வது லோக்சபாவின் கடைசி அலுவல் நாளான இன்று, தனது உரையின்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக தாக்கிப்பேசுவதை பிரதமர் நரேந்திர மோடி தவிர்க்கவில்லை.
பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைவதால், லோக்சபா தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபாவில் உரையாற்றினார்.

அப்போது 16வது லோக்சபாவில் தனது அரசு செயல்பட்ட விதத்தை பெருமையுடன் குறிப்பிட்டார். அதேநேரம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபாவிற்குள் நடந்து கொண்ட சில விஷயங்களை மோடி திரும்பவும் கிண்டலுடன் நினைவுபடுத்தி பேசியதை கவனிக்க முடிந்தது.
மோடி பேச்சிலிருந்து இதோ:
சிலர் விமானத்தை பறக்கவிட முற்ப்பட்டனர். ஆனால், ஜனநாயகத்தின் உயரத்தை அவர்களால் தொட முடியவில்லை. சிலர், பூகம்பமே நடந்துவிடும் என எச்சரித்தனர். ஆனால், நாங்கள் அப்படி எதையும் பார்க்கவில்லை.
முலாயம் சிங் யாதவ், இந்த அரசுக்கு ஏற்கனவே பாராட்டு பத்திரம் வழங்கிவிட்டார். அவர் இந்த அரசுக்கு ஆசி வழங்கிவிட்டார்.
இந்த லோக்சபாவில்தான் நான், சிலரை கட்டிப்பிடிப்பதற்கும், கட்டி இறுக்குவதற்குமான வித்தியாசத்தை நான் அறிந்து கொண்டேன்.
மேலும், இந்த அவையில்தான், கண்ணடித்ததையும் பார்க்க நேர்ந்தது. இங்கு நடத்தப்பட்ட கெட்ட செயல்களுக்கு பலன் கிடைக்காமல் போகட்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது உரையின்போது, ராகுல் காந்தியை மறைமுகமாக தாக்கினார்.
ராகுல் காந்தி ரபேல் விவகாரத்தை முன்வைத்து காகிதத்தில் செய்த விமானத்தை கொண்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டார், இதேபோல, பணமதிப்பிழப்பு விவகாரம் தொடர்பாக, தன்னை லோக்சபாவில் பேச அனுமதித்தால், பூகம்பம் ஏற்படும் என்று, 2016ம் ஆண்டு, ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
இதேபோல திடீரென அவைக்குள்ளாக பிரதமர் மோடியை, ராகுல் காந்தி கட்டியணைத்தார், விவாதத்தின்போது கண்ணடித்தார். இப்போது தெரிகிறதா மோடி ஏன் இதை குறிப்பிட்டார் என்று.












Click it and Unblock the Notifications