டிரம்புக்கு செக் மேட்.. அமெரிக்க பயணத்தை ரத்து செய்த மோடி
டெல்லி: நட்பு நாடுகளாக இருந்த இந்தியா, அமெரிக்கா உறவில் சமீபகாலமாக விரிசல்கள் விழுந்து வருகின்றன. நாளுக்கு நாள் அது அதிகரித்துக் கொண்டிருந்தன. வரி விவகாரத்தில் அமெரிக்கா அத்துமீறி கொண்டிருக்கும் நிலையில், தன் நிலைப்பாட்டில் இந்தியாவும் உறுதியாக உள்ளது. மோடி என் நண்பர் என்று டிரம்ப் பெருமையாக கூறி சில மணி நேரம் தான் ஆகியுள்ளது. இந்நிலையில் இந்த மாத இறுதியில் அமெரிக்க செல்ல இருந்த பிரதமர் மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா, இந்தியா நாடுகளிடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்றதில் இருந்து, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகிறார். விசா கட்டுப்பாடுகளில் தொடங்கி வரி உயர்வு வரை பல்வேறு நெருக்கடிகளை சுமத்தி வருகிறார்.

வரி பிரச்சனை
ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு உடன்பாடில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டிரம்ப், இந்திய பொருட்களுக்கான அமெரிக்க வரியை 50 சதவீதம் உயர்த்தியுள்ளார். இந்த வரி உயர்வு அமலுக்கு வந்த நிலையில் தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்கா தன் நிலையில் இருந்து மாறாத நிலையில், இந்தியாவும் தன்னுடைய நிலையில் உறுதியாகவே உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது தொடரும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஆணவ பேச்சு
வரி உயர்வு தொடர்பாக அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் செய்தியாளர்களிடம், "அமெரிக்க சந்தை இல்லாமல் இந்தியாவால் வர்த்தகம் செய்ய முடியாது. இதை அவர்கள் விரைவில் உணர்ந்து 2 மாதங்களில் அமெரிக்காவிடம் மன்னிப்பு கேட்பார்கள். தாங்கள் எந்தப் பக்கம் இருக்க வேண்டும் என்பதை இந்தியா முடிவு செய்ய வேண்டும்." என்று ஆணவத்துடன் கூறியுள்ளார்.
இது இந்தியாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டொனால்ட் டிரம்ப், "மோடி என் சிறந்த நண்பர். அவர் சிறந்த பிரதமரும் கூட. என்ன.. அவரின் சில நடவடிக்கைகளில் எனக்கு உடன்பாடில்லை. இந்தியா - அமெரிக்காவின் நல்உறவு எப்போதும் தொடரும். இதுபோன்ற தருணங்கள் மிகவும் அரிதானது. அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்." என்று கூறியிருந்தார்.
பயணங்கள் ரத்து
கடந்த சில நாட்களாக டிரம்பின் பேச்சில் மாற்றம் தெரிந்தாலும், அவரின் செயல்பாட்டில் பெரிதாக மாற்றம் இல்லை. இந்தியாவில் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டதாக கடந்த வாரம் தகவல் வெளியானது.
இதேபோல இந்த மாத இறுதியில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது அவர் டிரம்பை சந்திப்பார் என்றும் தகவல் வெளியானது. டிரம்பின் இந்திய பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மோடியின் அமெரிக்க பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோடிக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மோடி என் நண்பர் என்று டிரம்ப் கூறியது பரவலான நிலையில், உடனடியாக அவரின் அமெரிக்க பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications