2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலின் அடையாளம்.. பிரதமர் நரேந்திர மோடி கடும் விமர்சனம் !
டெல்லி: அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது 2032 ஆம் ஆண்டு 6ஜி சேவையை தொடங்கமுடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் 1997ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் 25 ஆம் ஆண்டு தொடக்க தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த வெள்ளிவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி 5 ஜி அலைக்கற்றை சோதனையை தொடக்கி வைத்தார்.
பின்னர் பிரதமர் மோடி பேசுகையில் 8 ஆண்டுகளில் தொலைத் தொடர்பு துறையில் ஏராளமான புதிய ஆற்றலை உட்புகுத்தி உள்ளோம். 2 ஜி சகாப்தம், கொள்கை முடக்கம், ஊழல் ஆகியவற்றின் அடையாளமாக இருந்தது.
கியான்வாபி மசூதி! மக்கள் வாழ்வை சீர்குலைத்து அதை திசைதிருப்ப மதப்பிரச்சனை! மோடி அரசு மீது மமக சாடல்!
3ஜி டூ 4ஜி
3ஜியில் இருந்து 4ஜிக்கு வேகமாக முன்னேறியுள்ளோம். தற்போது 5 ஜிக்கு மாறியுள்ளது. இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமார் 450 பில்லியன் டாலர் அளவிற்கு 5 ஜி தொழில்நுட்பம் பங்காற்றும்.
5ஜி தொழில்நுட்பம்
5ஜி தொழில்நுட்பம் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான விஷயம். இது இணைய வேகத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் வளர்ச்சியையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது. நாட்டில் உள்ள கிராமங்கள் அனைத்திற்கும் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்க வேண்டும்.
10 ஆண்டுகளில் 6ஜி
அடுத்த 10 ஆண்டுகளில் நாம் 6ஜி சேவையை தொடங்கலாம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் செல்போன் தயாரிக்கும் ஆலைகள் 2 லிருந்து 200 ஆக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் மிகப் பெரிய செல்போன் தயாரிப்பு மையமாக இந்தியா விளங்குகிறது.
5ஜி தொழில்நுட்பம் ரூ 220 கோடி
இந்தியாவில் குறைந்த செலவில் தொலைத்தொடர்பு டேட்டா கட்டணம் கிடைக்கிறது. 5 ஜி தொழில்நுட்பமானது 220 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஐஐடி சென்னை, ஐஐடி டெல்லி, ஐஐடி ஹைதராபாத், ஐஐடி மும்பை, ஐஐடி கான்பூர் உள்ளிட்டவை கலந்து கொண்டன.