முதல் பந்திலேயே சிக்ஸர்! 3.0 ஆட்சியில் பிரதமர் மோடி போட்ட முதல் கையெழுத்து.. தெளிவாக சொன்ன மெசேஜ்!
டெல்லி: 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி இன்று முறைப்படி தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டு முதல் கோப்பில் கையெழுத்திட்டார். அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு எது தெரியுமா?
விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு கோப்பில் தான் பிரதமர் மோடி முதல் கையெழுத்திட்டுள்ளார். பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் 9.2 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ. 20,000 கோடி தொகையை விடுவிப்பதற்கான கோப்பில் பிரதமர் மோடி இன்று கையெழுத்திட்டுள்ளார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 240 இடங்களில் வென்ற பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இந்த முறை ஆட்சி அமைத்து உள்ளது. நேற்று மாலை நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவி ஏற்றார் நரேந்திர மோடி. குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மொத்தம் 72 பேர் நேற்றைய தினம் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி சவுத் பிளாக்கில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றுக்கொண்டதும் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட்டு, தனது அலுவல் பணிகளை துவக்கினார். பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி ஒதுக்கீடு செய்யும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார்.

பிரதமர் மோடி 3வது முறையாக பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்தாக எந்த கோப்பில் கையெழுத்திடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், அவர் பி.எம். கிசான் நிதி திட்டத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை விடுவிப்பதற்கான கோப்பில் தனது முதல் கையெழுத்தை இட்டார்.
பிரதமரின் கிசான் நிதி திட்டம் என்பது மத்திய வேளாண்துறையின் கீழ் விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கும் திட்டம். இந்த திட்டத்திற்கு ஒவ்வொரு தவணையாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி தனது கையெழுத்தாக அந்த திட்டத்திற்கான 17 வது தவணை தொகையாக ரூபாய் 20 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளார். இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள 9.3 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
நரேந்திர மோடியின் கடந்த ஆட்சியில் விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக, வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தீவிர போராட்டம் நடத்தினர். ஆனாலும், மோடி தலைமையிலான அரசு அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
விவசாயிகள் மரணம், விவசாயிகள் போராட்டம் போன்றவை வட இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே, இந்த முறை பா.ஜ.கவால் தனிப் பெரும்பான்மையை பெற முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், 3வது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தமது புதிய அரசு விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என்பதை ஒரு ஸ்டேட்மெண்ட்டாக தெரிவிக்கும் வகையிலேயே பி.எம்.கிசான் நிதி திட்டத்திற்கு நிதியை ஒதுக்கி தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
முதல் கையெழுத்திட்ட பிறகு பிரதமர் மோடி, “விவசாயத் துறையின் வளர்ச்சிக்காக மேலும் கடுமையாக பணியாற்ற நாங்கள் விரும்புகிறோம். விவசாயிகளின் நலனிற்காக எமது அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட முடிவு செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications