சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின் முதல்முறையாக ஜம்முவில் பிரதமர் மோடி- உற்சாக வரவேற்பு!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக ஜம்மு யூனியன் பிரதேசத்துக்கு வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
ஏப்ரல் 24 ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தையொட்டி ஜம்மு யூனியன் பிரதேசம் சம்பா மாவட்டத்தில் பாலி பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று ஶ்ரீநகர் வருகை தருந்தார். ஶ்ரீநகர் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பஞ்சாயத்து ராஜ் உறுப்பினர்கள் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட உள்ள ரட்லே மற்றும் குவார் நீர்மின் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ஜம்முவில் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. டெல்லி அமிருதசரஸ்- கட்ரா இடையே ரூ 7500 கோடி ரூபாய் மதிப்பிலான 3 சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
பனிகால்- காசிகுண்ட் இடையே ரூ 3,100 கோடி மதிப்பிலான 8.45 கி.மீ. நீள சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. இதன் மூலம் பனிலால் மற்றும் காசிகுண்ட் இடையே பயணம் நேரம் 16 கி.மீ. தூரம் குறைக்கப்பட்டு ஒன்றரை மணி நேரம் மிச்சமாகும்.
பிரதமரின் ஜம்மு பயணத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. ஜம்மு காஷ்மீருக்கு மாநில சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 ஆவது சட்டப்பிரிவு 2019 ஆம் ஆண்டு பறிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டவுடன் முதல்முறையாக இன்று ஜம்மு வருகை தந்துள்ளார் பிரதமர் மோடி.
முன்னதாக பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இருந்து 12 கி.மீ.தொலைவில் வெடிகுண்டு வெடித்தது. அதேபோல் சஞ்வான் பகுதியில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் முகாம் மீது ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 2 பேர் நேற்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்த முயன்றனர். அப்போது அவர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.












Click it and Unblock the Notifications