பாலகோட் உள்ளே புகுந்து அடித்ததெல்லாம் சரி.. ஆனால் வீரர்களின் தியாகத்திற்கு எப்போது முற்றுப்புள்ளி
டெல்லி: எல்லையில் வீர மரணமடைந்த, வீரர்களின், தியாகம் ஒருபோதும் வீண்போகாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஆனால் வீரர்கள் தியாகம் தொடர் கதையாவதுதான் வருத்தமாக இருக்கிறது.
Recommended Video
புல்வாமாவில் இந்திய துணை ராணுவப் படையினர் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு கூறிய அதே வார்த்தையை மோடி இப்போதும் சொல்லியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அந்த சூளுரைக்கும் பிறகுதான், பாலகோட் பகுதியில் இந்திய போர் விமானங்கள் சென்று பாகிஸ்தான் மண்ணில் வைத்தே தீவிரவாத முகாம்களை தாக்கினர். ஆனாலும் தீவிரவாதிகள் ரூபத்தில் அல்லாமல் சீனாவிலிருந்து ராணுவத்தினர் ரூபத்தில் நமக்கு எமன் வந்துள்ளது அதிர்த்தி தருகிறது.
இந்தியாவை சீண்டினால் தக்க பதிலடி தரப்படும்.. வீரர்களின் தியாகம் வீணாகாது..பிரதமர் மோடி எச்சரிக்கை!
தாக்குதல்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு இந்திய பாதுகாப்பு படைகள் சென்ற வாகனத்தின் மீது மற்றொரு வாகனத்தை கொண்டு மோதி குண்டுகளை வெடிக்க செய்தது. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நடந்த இந்த கொடூரமான தாக்குதலில் 40 பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர்.
தியாகம் வீண் போகாது
அன்றைய தினம் ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், புல்வாமா சிஆர்பிஎஃப் படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இழிவானது. கோழைத்தனமானது. இந்த தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். நமது வீரர்களின் உயிர் தியாகம் ஒருபோதும் வீண்போகாது என்று சூளுரைத்தார். மேலும், அடுத்த நாள் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும், இதே முழக்கத்தை மக்கள் முன்னால் வைத்தார் நரேந்திர மோடி.
பாகிஸ்தானுக்குள் பறந்த இந்திய போர் விமானங்கள்
இந்த சூளுரை வெளியான அடுத்த இரண்டு வாரங்களுக்குள், அதாவது பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி அதிகாலையில், பாகிஸ்தான் நாட்டில் உள்ள பாலகோட் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படையின் மிராஜ் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்தன. இஸ்ரேலிய தயாரிப்பான லேசர் குண்டுகளால் தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. சுமார் 400 தீவிரவாதிகள் இந்த அதிரடியில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது உண்மையா என்பது இன்று வரை கேள்விக்குறியதாக உள்ளது.
மோடி மறுபடி சூளுரை
இந்த நிலையில்தான், தமிழகம் உள்ளிட்ட 15 மாநில முதல்வர்களுடன் கொரோனா பாதிப்பு தொடர்பாக இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தினார் நரேந்திர மோடி. ஆலோசனை கூட்டம் துவங்குவதற்கு முன்பாக மோடி பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மோடி தனது உரையின்போது, இந்தியா அமைதியை விரும்பக்கூடிய நாடுதான், ஆனால் எல்லையில் நிகழ்ந்த மோதலில் வீரமரணம் அடைந்த நம் வீரர்களின் தியாகம் வீண் போகாது. நாட்டின் ஒற்றுமையும், இறையாண்மையும் மிகவும் முக்கியமானது. இந்தியா அமைதியை விரும்புகிறது. அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும். அத்துமீறினால் எந்த ஒரு சூழலிலும் தக்க பதிலடி தரும் வல்லமையும் இந்தியாவிடம் உள்ளது. இவ்வாறு மோடி பேசியுள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, வீரர்களின் தியாகம் வீண் போகாது என்று மோடி கூறியிருந்தார். இப்போது சீனாவுடனான எல்லை பிரச்சனையின்போது மறுபடியும் அதே வார்த்தையை கூறி எச்சரித்துள்ளார். மோடியின் சூளுரை மிகவும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.