"இந்தியா முஸ்லீம் நாடாக மாறும்.." வெறுப்பை கொட்டிய பாஜக மூத்த தலைவர்.. என்னவெல்லாம் சொல்றாரு பாருங்க
டெல்லி: பாஜக மூத்த தலைவர் ஒருவர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சர்ச்சைக்குரிய சில கருத்துகளைத் தெரிவித்தார். அது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வட கிழக்கு மாநிலங்களில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் ராம நவமி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட வன்முறை ஓயவே சில நாட்கள் வரை ஆனது.

சில இடங்களில் இன்னுமே கூட பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. இதனிடையே டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக தலைவர் ஒருவர் கூறிய கருத்துக்கள் பெரியளவில் சர்ச்சையாகியுள்ளது.
பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர வடகிழக்கு டெல்லியில் ஐக்கிய இந்து முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் வன்முறைக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பேசியுள்ளார். ஜெய் பகவான் கோயல் என்பவர் தான் இப்படிப் பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஐக்கிய இந்து முன்னணி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜெய் பகவான் கோயல் சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்தார்.
அந்த கூட்டத்தில் பேசிய அவர், ""எல்லா முஸ்லீம்களும் ஒரே மாதிரியானவர்கள் தான். இதன் காரணமாகவே பிஎப்ஐ அமைப்பின் செயல்பாடுகளை எந்தவொரு இஸ்லாமியத் தலைவரும் கண்டிக்கவில்லை. நம் கையில் திரிசூலத்துடன் சாலையில் இறங்கவில்லை என்றால் இந்தியா இன்னும் 5-7 ஆண்டுகளில் முஸ்லிம் தேசமாக மாறிவிடும்" என்று கூறி அவர் சர்ச்சையைக் கிளப்பினார்.
இது மட்டுமின்றி, முஸ்லிம் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொன்ன அவர், நாட்டை இந்து தேசமாக மாற்றுவதை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். டெல்லி பாஜக பொருளாளர் ராம் அவதார் குப்தா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சத்யநாராயண் ஜாதியா எனப் பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில், அவர்களுக்கு முன்னிலையிலேயே ஜெய் பகவான் கோயல் இந்த கருத்துகளைத் தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பலரும் ஜெய் பகவான் கோயலின் பேச்சைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த வீடியோ வேகமாகப் பரவும் நிலையில், ஜெய் பகவான் கோயல் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வெறுப்புப் பேச்சு தொடர்பாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
முழு பேச்சையும் ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். சமீபத்தில் தரம் சன்சத் வெறுப்புப் பேச்சு வழக்கில் எஃப்.ஐ.ஆர் மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் செய்ததற்காக டெல்லி போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல உத்தரப் பிரதேசத்தில் ராம நவமியின் போது பசுவைக் கொன்றதாக அளிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து 4 இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்து மகாசபை உறுப்பினர்களே ராம நவமியின் போது பசுவைக் கொன்றுள்ளனர்.
அதைத்தான் இஸ்லாமிய இளைஞர்கள் செய்ததை போலப் புகார் அளித்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இருவரைக் கைது செய்துள்ள உபி போலீசார், தலைமறைவாக இருக்கும் மற்றவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.











Click it and Unblock the Notifications