இது லிஸ்ட்லயே இல்லையே! விரைவில் வரும் மக்கள்தொகை கட்டுப்பாட்டு சட்டம்! மத்திய அமைச்சர் பரபர தகவல்
டெல்லி: இந்தியாவில் மக்கள்தொகை கட்டுப்பாடு தொடர்பான சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் பிரஹலாத் சிங் படேல் அமைச்சராக உள்ளார். இவர் உணவு பதப்படுத்துதல் மற்றும் ஜல்சக்தி துறையை நிர்வகித்து வருகிறார்.
இவர் சத்தீஸ்கார் மாநிலம் ராய்ப்பூர் பரோண்டாவில் உள்ள ஐசிஏஆர்-நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பயோடிக் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட்டில் 'கரிப் கல்யாண் சம்மேளன்' நிகழ்ச்சில் பங்கேற்றார்.

விரைவில் சட்டம்
அப்போது மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பான சட்டம் பற்றி நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் கூறுகையில், ‛‛இந்த சட்டம் விரைவில் கொண்டு வரப்படும். கவலைப்பட வேண்டாம். இந்தியாவில் வலுவான மற்றும் பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் இதுவும் நடைமுறைக்கு வரும்'' என்றார்.

மத்திய அரசின் தாரக மந்திரம்
மேலும் அவரிடம் மத்திய அரசின் 8 ஆண்டுகால ஆட்சி பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‛‛சேவை, மக்கள் நலன், ஊழல் இல்லா நிர்வாகிகள், ஏழைகளின் மேம்பாடு உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இதுதான் மத்திய அரசின் தாரக மந்திரமாக உள்ளது'' என்றார். முன்னதாக அவர் பிரதமர் நரேந்திர மோடி அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து நிகழ்ச்சியில் பேசியது குறிப்பிடத்தக்கது.

2வது இடத்தில் இந்தியா
உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள்தொகையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. அதன்படி சீனாவில் மக்கள் தொகை 140 கோடியை தாண்டியுள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 140யை தொட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இந்தியா-சீனா இடையே மிகக்குறைந்த அளவில் மட்டுமே வித்தியாசம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு முதலிடம் வாய்ப்பு
இதனால் அடுத்த இரு ஆண்டுகளுக்குள் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பான சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications