எக்சிட் போல் கிடக்கட்டும்.. டெல்லி ஆபிசில் பிரமாண்ட பந்தல்.. கொண்டாட்டத்திற்கு ரெடியாகும் காங்கிரஸ்
டெல்லி: லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த நிலையில் எப்படியும் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும் என்ற உறுதியோடு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பந்தல் போடும் பணி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில் பெரும்பாலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளன.

ஆனால் இதனை முற்றிலுமாக இந்தியா கூட்டணி கட்சியினர் மறுத்து வருகின்றனர். கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பெரும்பாலும் பாஜக கூட்டணியே வெற்றி பெறும் என்றும் கூறின. ஆனால் அந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இதனை மேற்கோள் காட்டி இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் எல்லாம் கருத்துக்கணிப்புகள் அல்ல கருத்து திணிப்புகள் என்றும் இந்தியா கூட்டணி உறுதியாக 295 இடங்களில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் இந்தியா கூட்டணி நிச்சயமாக 295 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்தியா கூட்டணி வெற்றி உறுதி என்ற நம்பிக்கையோடு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பிரமாண்ட பந்தல் போடும் பணி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. மேலும் பட்டாசுகள் வெடித்து வெற்றியை கொண்டாடவும் காங்கிரஸ் தயார் நிலையில் உள்ளது. இதற்காக பட்டாசுகள், இனிப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அம்மாநில காங்கிரஸ் தலைமை, வெற்றி கொண்டாட்டத்திற்காக 100 கிலோ லட்டுகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதாம். கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய சரிவை சந்தித்த நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் 100 கிலோ லட்டுகளை ஆர்டர் செய்துள்ளது.
லோக்சபா தேர்தல்: முன்னதாக பாஜகவை விழ்த்தி ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக ஹாட்ரிக் வெற்றியை பெறும் என்றே கூறுகின்றன. அதிலும் இந்தியா டுடே உள்ளிட்ட 3 செய்தி நிறுவனங்கள் பாஜகவிற்கு 400 இடங்கள் வரை கிடைக்கும் என்று கணித்துள்ளன.
இப்படி எக்சிட் போல் கணிப்புகள் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளன. ஆனாலும் கருத்துக் கணிப்புகள் தவறாக அமையும் என்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூறி வருகின்றன. எப்படி ஆயினும் இன்னும் 10 மணி நேரத்தில் இதற்கான விடை கிடைத்துவிடும்.












Click it and Unblock the Notifications