அயோத்தி ராமர் கோயில்... கட்டுமானப் பணிகளுக்கு ரூ. 5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசு தலைவர்
டெல்லி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள 5 லட்சத்து 100 ரூபாயை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நன்கொடையாக அளித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோயிலுக்குக் கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது
சுமார் 161 அடி உயரத்தில் அமையவுள்ள இந்த ராமர் கோயில், மூன்று தளங்களையும் 318 தூண்களையும் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
இந்நிலையில், கோயில் கட்டுமானத்திற்குத் தேவையான நிதியைச் சேகரிக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக ஸ்ரீ ராம் ஜன்மபூமி அறக்கட்டளை சார்பில், அதன் இணைத் தலைவர் கோவிந்த் தேவ் கிரிஜி மகாராஜ் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.
ஐந்து லட்ச ரூபாய் நிதியுதவி
அவருடன் வி.எச்.பி. அமைப்பின் செயல் தலைவர் அலோக் குமார், கோயில் கட்டுமான குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா உள்ளிட்டவர்களும் இருந்தனர். இந்நிலையில், கோயில் கட்டுமானத்திற்குக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 லட்சத்து 100 ரூபாயை நன்கொடையாக அளித்தார்.
இந்து குடும்பங்கள் பங்களிப்பைத் தர வேண்டும்
பிகார் தலைநகர் பாட்னாவில் நிதி சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டது. அப்போது பேசிய பாஜகவின் சுஷில் குமார் மோடி, "பிகாரில் உள்ள ஒவ்வொரு இந்து குடும்பமும் ராமர் கோயிலுக்கு தங்களால் முடிந்த பங்களிப்பை அளிக்கும் என்று நம்புகிறேன். கோயிலுக்கு எவ்வளவு நிதி தேவைப்பட்டாலும், மக்களின் ஒத்துழைப்புடன் அதை எங்களால் சேமிக்க முடியும் என்று என்று நான் நம்புகிறேன்" என்றார்.
மசூதி
மாற்று மதத்தினருக்கு ராமர் கோயிலுக்கு நிதி அளிக்கலாமா என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "தாராளமாக அளிக்கலாம். ஆனால் ஒரு மசூதி கட்டப்படுகிறது என்றால் அங்கிருக்கும் இஸ்லாமியர்களே அதிக பங்களிப்பை அளிப்பார்கள். அதேபோல ராமர் கோயிலுக்கு இந்துக்கள் அதிகளவில் பங்களிப்பைத் தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்" என்றார்.
டோக்கன்கள் விநியோகம்
கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து ராமர் கோயிலுக்கான திட்டம் தீட்டப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது. கோயில் கட்டுமானத்திற்குத் தேவையான நிதி திரட்ட 10, 100 மற்றும் 1000 ரூபாய் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.