குழந்தைக்கு கொடுக்கும்.. மிட்டாய் கூட அதிக வரி போட்டவர்கள்தான் காங்கிரஸ்! பிரதமர் மோடி சரமாரி தாக்கு
டெல்லி: ஜிஎஸ்டி மறுசீரமைப்பு தொடர்பாக மத்திய அரசு நேற்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்கிடையே இது தொடர்பாகப் பேசியுள்ள பிரதமர் மோடி, காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் அன்றாட அத்தியாவசியப் பொருட்கள், உணவு மற்றும் மருந்துகளுக்கு வரி விதிக்கப்பட்டதாக அவர் சாடினார்.
நேற்றைய தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றன. அதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடந்தன. வரி விகிதங்கள் குறைக்கப்பட்டால் மாநிலங்களின் வருவாய் கவலைகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்தன. இருப்பினும், அதையும் தாண்டி புதிய வரி விகிதங்கள் அமல்படுத்தப்பட்டன.

இது முக்கியமான அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் காங்கிரஸை பிரதமர் மோடி சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "2014ல் நான் வருவதற்கு முன்பு, சமையல் பொருட்கள், விவசாயப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஆயுள் காப்பீடு எனப் பல பொருட்களுக்கும் காங்கிரஸ் அரசு பல்வேறு வரிகளை வசூலித்தது.
டூத்பேஸ்ட், சோப்பு, ஹேர் ஆயில் ஆகியவற்றுக்கு 27% வரி. தட்டுகள், பேப்பர் தட்டுகள், கரண்டிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு 18 முதல் 28% வரி. பற்பொடிக்கு கூட 17% வரி விதித்தனர். மேலும், குழந்தைகளின் மிட்டாய்களுக்கு கூட காங்கிரஸ் 21% வரி வசூலித்தார்கள். நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சாதாரணச் சைக்கிளுக்குக் கூட 17% வரி விதிக்கப்பட்டது. அந்தளவுக்கு அப்போது நிலைமை மோசமாக இருந்தது.
லட்சக்கணக்கான தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் சுயமரியாதை கொடுக்கும் தையல் இயந்திரத்திற்கு 16% வரி விதிக்கப்பட்டது. சிமென்ட்டிற்கு 29% வரி விதித்து வீடு கட்டுவதை கூட கடினமான விஷயமாக மாற்றினர். ஹோட்டல் ரூம்களுக்கு 14% வரி விதித்து மிடில் கிளாஸ் மக்கள் வெளியே செல்லக் கூட முடியாமல் ஆக்கினர். ஏசி, டிவி, மின்விசிறி போன்ற அனைத்துப் பொருட்களுக்கும் 31% வரி இருந்தது. 2014-க்கு முன்பு, விவசாயத்தில் கூட லாபம் மிகக் குறைவாக இருந்தது. ஏனென்றால் விவசாயப் பொருட்கள் மீது காங்கிரஸ் அரசு அதிக வரி வசூலித்தது.. அதை தான் நாங்கள் மாற்றினோம்.
இந்த தீபாவளிக்கு நாங்கள் இரட்டை போனஸை கொடுப்போம் என நாட்டு மக்களுக்கு நான் உறுதியளித்திருந்தேன்... அதற்கேற்ப ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. நவராத்திரியின் முதல் நாளிலிருந்தே மக்கள் இதற்கான பலன் பெறத் தொடங்குவார்கள். இது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய சீர்திருத்தமாகும்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications