இந்தியா- வங்கதேசம் இடையேயான ரயில் சேவை- பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஹசீனா தொடங்கி வைத்தனர்!
டெல்லி: இந்தியா- வங்கதேசம் இடையேயான புதிய ரயில் சேவையை பிரதமர் மோடி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இணைந்து இன்று காலை 11 மணியளவில் காணொளிக் காட்சி மூலம் மூன்று இந்தியாவின் உதவியுடனான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தனர்.

அகௌரா - அகர்தலா எல்லை தாண்டிய ரயில் இணைப்பு; குல்னா - மோங்லா துறைமுக ரயில் பாதை; மற்றும் மைத்ரீ சூப்பர் அனல்மின் நிலையத்தின் அலகு - II ஆகிய மூன்று திட்டங்களை இருவரும் தொடங்கி வைத்தனர்.
திரிபுரா- வங்கதேசம் ரயில் சேவை: வங்கதேசத்துக்கு வழங்கப்பட்ட ரூ.392.52 கோடி இந்திய அரசின் மானிய நிதியுதவியின் கீழ் அகௌரா-அகர்தலா எல்லை தாண்டிய ரயில் இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் 6.78 கி.மீ இரட்டை ரயில் பாதை மற்றும் திரிபுராவில் 5.46 கி.மீ இரட்டை ரயில் பாதையுடன் ரயில் இணைப்பின் நீளம் 12.24 கி.மீ ஆகும்.

துறைமுக ரயில் பாதை: குல்னா-மோங்லா துறைமுக இரயில் பாதைத் திட்டம் இந்திய அரசின் சலுகைக் கடன் திட்டத்தின் கீழ் 388.92 மில்லியன் அமெரிக்க டாலர் மொத்த திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மோங்லா துறைமுகத்திற்கும் குல்னாவில் தற்போதுள்ள ரயில் வலையமைப்பிற்கும் இடையில் சுமார் 65 கி.மீ அகல ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதன் மூலம், வங்கதேசத்தின் இரண்டாவது பெரிய துறைமுகமான மோங்லா அகல ரயில் பாதையுடன் இணைக்கப்படுகிறது.

அனல்மின் திட்டம்: 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் இந்திய சலுகை நிதி திட்டத்தின் கீழ் மைத்ரி சூப்பர் அனல்மின் திட்டம், வங்கதேசத்தின் குல்னா பிரிவில் உள்ள ராம்பாலில் அமைந்துள்ள 1320 மெகாவாட் சூப்பர் அனல்மின் நிலையம் ஆகும். இந்தியாவின் என்.டி.பி.சி லிமிடெட் மற்றும் வங்கதேச மின் வளர்ச்சிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையிலான 50:50 கூட்டு முயற்சி நிறுவனமான வங்கதேசம்-இந்தியா நட்புணர்வு மின் நிறுவனம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. மைத்ரீ சூப்பர் அனல்மின் நிலையத்தின் முதல் அலகு 2022ம் ஆண்டு செப்டம்பரில் இரு பிரதமர்களாலும் கூட்டாக திறந்து வைக்கப்பட்டது மற்றும் 2 வது அலகு 2023 நவம்பர் 1 அன்று திறந்து வைக்கப்படும். மைத்ரீ சூப்பர் அனல்மின் நிலையத்தை இயக்குவது வங்கதேசத்தின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தும். இந்தத் திட்டங்கள் பிராந்தியத்தில் இணைப்பு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும்.












Click it and Unblock the Notifications