இந்தியாவின் கல்வி துறையே மாஃபியாக்கள் கைகளில்.. ராகுலைத் தொடர்ந்து விளாசிய தங்கை பிரியங்கா!
டெல்லி: நீட், நெட், தேர்வு முறைகேடுகள் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக வேடிக்கை பார்ப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார். மேலும் நாட்டின் கல்வியையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பேராசை பிடித்தவர்களின் கைகளில் ஒப்படைக்கும் அரசியல் பிடிவாதமும், திமிர்த்தனமும், வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து ஆகியவையே நமது கல்விமுறையின் அடையாளமாகிப் போய்விட்டது எனவும் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
நீட், நெட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளதாவது: நாட்டின் கல்வியையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பேராசை பிடித்தவர்களின் கைகளில் ஒப்படைக்கும் அரசியல் பிடிவாதமும், திமிர்த்தனமும், தாள் கசிவு, தேர்வு ரத்து, அரசியல் போக்கிரித்தனம் ஆகியவையே நமது கல்விமுறையின் அடையாளமாகிப் போய்விட்டது.

NEET-UG:- வினாத்தாள் கசிவு
NEET-PG:- ரத்து செய்யப்பட்டது
UGC-NET:- ரத்து செய்யப்பட்டது
CSIR-NET:- ரத்து செய்யப்பட்டது
இன்று நாட்டின் மிகப் பெரிய தேர்வுகளின் நிலை இதுதான். பாஜக ஆட்சியில் ஒட்டுமொத்த கல்வித்துறையும் மாஃபியாக்கள் மற்றும் ஊழல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க அரசால் ஒரு தேர்வை கூட சுத்தமாக நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இன்று இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தடையாக பாஜக அரசு மாறியுள்ளது. நாட்டின் திறமையான இளைஞர்கள் பாஜகவின் ஊழலை எதிர்த்துப் போராடுவதில் தங்கள் பொன்னான நேரத்தையும் ஆற்றலையும் வீணடிக்கிறார்கள். மோடி இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார். இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக மூத்த காங்கிரஸ் தலைவரும் பிரியங்கா காந்தியின் அண்ணனுமான ராகுல் காந்தி, இப்போது நீட் முதுநிலைத் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடியின் ஆட்சியில் சீர்கேடடைந்த கல்வி முறைக்கு இது மற்றொரு துரதிர்ஷ்டவசமான உதாரணம்.
பா.ஜ., ஆட்சியில், மாணவர்கள், 'படிக்க' கட்டாயப்படுத்தப்படாமல், தங்களது எதிர்காலத்தைக் காப்பாற்ற, அரசுடன் 'போராட' வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இப்போது புரிகிறது - ஒவ்வொரு முறையும் இந்த சம்பவங்களை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த மோடி, வினாத்தாள் கசிவு மோசடி மற்றும் கல்வி மாஃபியாவின் முன் முற்றிலும் செயலற்றவராக உள்ளார். நரேந்திர மோடியின் திறமையற்ற அரசு மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது - அதிலிருந்து நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்ற வேண்டும் என விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications