பொறுமையை சோதிக்காதீர்கள்.. கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்.. மத்திய அரசுக்கு, விவசாயிகள் வார்னிங்!
டெல்லி: மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 6 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, கடும் குளிர், மழை ஆகியவற்றை எல்லாம் தாங்கி பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.

கொரோனா 2-வது அலை
வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது. ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள். கடந்த சில வாரங்களாக டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்த நிலையில் தொடர்ந்து போராட்டம் நடத்திய விவசாயிகள், மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு வழிவிடும் வகையில் திக்ரி எல்லையில் மூடப்பட்டு இருந்த சாலையை திறந்தனர்.

உயிரை இழக்கும் விவசாயிகள்
இந்த நிலையில் எங்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்குங்கள். கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று மத்திய அரசு டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவாசாய சங்கங்கள் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:- இந்த போராட்டத்தில் இதுவரை 470 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரை இழந்துள்ளனர். பல விவசாயிகள் போராட்டத்துக்காக தங்கள் வேலைகள், கல்வி மற்றும் பிற வேலைகளை விட்டு வந்துள்ளனர்

அரசு ஆதரவு இல்லை
இதற்கிடையே எங்கள் மீதான அரசின் அணுகுமுறை எவ்வளவு மனிதாபிமானமற்ற முறையிலும், கவனக்குறைவாகவும் இருக்கிறது என்பதை காட்டியது. டக் தே புயல், மழை காரணமாக உணவு மற்றும் தங்குமிடம் தொடர்பாக கடினமான சூழ்நிலை நிலவி வருகிறது. சாலைகள் மற்றும் போராட்ட தளங்களின் பல பகுதிகள் மழைநீரில் சூழ்ந்துள்ளன. எந்தவொரு அரசின் வசதிகளும், ஆதரவும் இல்லாத நிலையில் கடந்த ஆறு மாதங்களாக, இதுபோன்ற எல்லா சூழ்நிலையையும் போராட்டம் நடத்தும் விவசாயிகளே கையாளுகின்றனர்.

பொறுமையை சோதிக்காதீர்கள்
மத்திய அரசு விவசாயிகளின் மேல் அக்கறை கொண்டு, உண்மையிலேயே விவசாயிகளின் நலனை விரும்பினால் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். எங்களின் பொறுமையே சோதிக்காதீர்கள். உடனடியாக அரசு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். இவ்வாறு எஸ்.கே.எம் அறிக்கையில் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications