ஜிஎஸ்டி நிலுவைத் தொகை.. நிர்மலா சீதாராமனை சந்தித்தார் பிடிஆர்!.. ராகுலுடனும் சந்திப்பு
டெல்லி: தமிழகத்திற்கு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விரைந்து வழங்கிடுமாறு கோரிக்கை மனுக்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டெல்லி சென்று அவரை சந்தித்து பேசினார்.
தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, ரூ 20,033 கோடி உள்ளது. தமிழகத்திற்கு சேர வேண்டிய கொரோனா நிவாரண நிதி ரூ 8.989 கோடி ரூபாய் தரப்படவில்லை. இதனால் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் திமுக தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற இந்த நிதி தேவைப்படுவதாக பல முறை தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் இதுவரை கிடைக்கவில்லை. தற்போது வரும் மார்ச் மாதம் தமிழக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அப்போது சில திட்டங்களை அறிவிக்க நிதி தேவைப்படுகிறது.
இதனால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து நிதியை ஒதுக்குமாறு கோர டெல்லி சென்றுள்ளார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். அங்கு நிர்மலா சீதாராமனை சந்தித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஜிஎஸ்டி , கொரோனா நிலுவைத் தொகை, இன்னபிற கோரிக்கை மனுக்களை அவரிடம் அளித்தார்.
இதையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்திக்க தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சென்றார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் இருந்தது. முதல்வரின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக வரும் 28ஆம் தேதி ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இதற்கான விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்க திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை இந்த விழாவுக்கு அழைப்பிதழ் வழங்க ராகுல் காந்தியை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சந்தித்திருக்கலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications