"விலகிய தூக்குக்கயிறு!" கத்தாரில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்கள்! சாதித்து காட்டிய மத்திய அரசு
டெல்லி: கத்தார் நாட்டில் உளவு பார்த்ததாகச் சொல்லி முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் திடீரென விடுக்கப்பட்டுள்ளனர்.
கத்தார் நாட்டில் பணிபுரிந்து வந்த முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள் 8 பேர் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். அந்நாட்டின் நீர்மூழ்க்கி கப்பல்கள் குறித்து உளவு பார்த்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதற்கிடையே முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் திடீரென விடுவிக்கப்பட்டுள்ளனர். இதை இந்திய அரசு உறுதி செய்துள்ளது. கத்தாரில் கடந்த 18 மாதங்கள் சிறையில் இருந்த அவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட 8 பேரில் 7 பேர் இப்போது இந்தியா திரும்பியுள்ளனர்.
வெளியுறவு துறை அமைச்சகம்: இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், "கத்தாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தஹ்ரா குளோபல் நிறுவனத்தில் பணிபுரியும் எட்டு இந்தியர்கள் விடுதலையை இந்தியா வரவேற்கிறது. அவர்களில் 8 பேரில் 7 பேர் இந்தியா திரும்பியுள்ளனர். கத்தார் அரசின் இந்த நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையை சேர்ந்த கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சவுரப் வசிஷ்த், கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுகுணகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால், மாலுமி ராகேஷ் ஆகியோர் கடந்த பல மாதங்களாகவே உளவு பார்த்ததாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
புகார் என்ன: அவர்கள் அனைவரும் தஹ்ரா குளோபல் என்ற தனியார் நிறுவனத்தால் பணிபுரிந்து வந்தவர்கள். கத்தார் கடற்படையின் இத்தாலிய U212 ஸ்டெல்த் நீர்மூழ்கிக் கப்பல்களை உளவு பார்த்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்த விவகாரத்தில் அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த அக்.26ஆம் தேதி கத்தார் நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், அனைத்து சட்ட வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகவும் அப்போதே இந்தியா கூறியது.
இந்தியாவின் தலையீட்டைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் அவர்களின் மரண தண்டனை குறைக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் அவர்கள் அனைவரும் இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இப்போது நாடு திரும்பியுள்ள முன்னாள் கடற்படை வீரர்கள், தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
பிரதமருக்கு நன்றி: இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "நாங்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்பியதில் மகிழ்ச்சியடைகிறோம். பிரதமர் மோடியின் தனிப்பட்ட தலையீட்டால் மட்டுமே இது சாத்தியமானது என்பதால், நிச்சயமாக நாங்கள் அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்" என்று அவர்களில் ஒருவர் கூறினார்.
அதேபோல மற்றொரு நபர் "நாங்கள் இந்தியாவுக்குத் திரும்ப சுமார் 18 மாதங்கள் காத்திருந்தோம். பிரதமருக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவரது தனிப்பட்ட தலையீடு இல்லாமல் இது சாத்தியமில்லை. மனதார இந்திய அரசுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்தியா எடுத்த ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நன்றி" என்றார்












Click it and Unblock the Notifications