ரபேல் டீல்… பாதுகாப்பு துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்.. மாயாவதி வலியுறுத்தல்
டெல்லி: தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் ரபேல் பேர ஊழலை மறைக்க , மோடி எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்து இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சனம் செய்துள்ளார்.
ரபேல் போர் விமான பேர விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம். சட்டவிரோதமாக பெறப்பட்ட ஆவணங்கள் மீது விசாரணை நடத்தக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

இதுகுறித்து, அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் கருத்து தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ்வாடி கட்சி தலைவர் மாயாவதி, உச்ச நீதிமன்றத்தின் மூலம் பாஜக அரசு மீது ஊழல் முத்திரை குத்தப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் நாட்டை தவறாக வழி நடத்திய மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்த மாயாவதி, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதேபோல், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில் மோடிஜி நீங்கள் முடிந்த அளவுக்கு பொய் சொல்லலாம். ஆனால், உண்மை தாமதமானாலும் கண்டிப்பாக வெளிவரும் என்று கூறியுள்ளார்.
மேலும், ரபேல் ஊழலில் ஒன்றன் பின் ஒன்றாக ஆதாரங்கள் வெளி வந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், இதுக்கு மேல் மறைத்து வைப்பதற்கு ரகசியங்கள் ஒன்றும் இல்லை எனவும் தெரிவித்தார். மோடிஜி கவலைப்படாதீர்கள், நீங்கள் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் விசாரணை நடக்கப்போகிறது என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications