ரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்.. ஓபன் கோர்ட்டில் விசாரணை
ரபேல் தீர்ப்பு மீதான மறுசீராய்வு மனுக்கள் இன்று முதல் உச்ச நீதிமன்றம் விசாரணை செய்யப்பட உள்ளது.
டெல்லி: ரபேல் தீர்ப்பு மீதான மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு உள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை ஓபன் - கோர்ட்டில் நடத்தப்பட இருக்கிறது.
ரபேல் வழக்கு இன்றில் இருந்து மீண்டும் விசாரணை செய்யப்பட இருக்கிறது. இந்த வழக்கில் கடந்த முறை விசாரணையின் போது முக்கிய ஆதாரங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் மீதான மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்று விசாரணை நடந்தது.
ரபேல் ஒப்பந்தத்தில் நடந்து முறைகேடு தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் இந்த வழக்கின் ஒற்றை கோரிக்கை. இது தொடர்பான ஆதாரங்களும் அப்போதே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சென்ற வருடம் தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
மிகவும் பரபரப்பாக இதில் விசாரணை நடந்து வந்தது. காங்கிரஸ் செய்த ஒப்பந்தத்தை விட பாஜக அரசு மிக மோசமான ஒப்பந்தம் செய்து அதிக விலைக்கு குறைந்த விமானங்களை வாங்கி உள்ளது. அதேபோல் இதில் இந்திய ஒப்பந்ததாரர் எச்ஏஎல் மாற்றப்பட்டு, ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டுள்ளது என்று புகார்கள் வைக்கப்பட்டது.
இந்த ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் தொடர்ந்த பொதுநல வழக்கு ஆகும் இது.
ஆனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ரபேல் ஒப்பந்தம் மத்திய அரசின் கொள்கை முடிவு, இதுதொடர்பாக விரிவான விசாரணை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஆனால் தொடர்ந்து வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் ஆகியோர் வரிசையாக தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதன் மீதான விசாரணைதான் இன்று தொடங்கியது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்தினர். இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த மனுக்கள் அனைத்தையும் ஏற்பதாக கூறியுள்ளனர். அதேபோல் அரசு இது தொடர்பாக தொடுத்த (இலக்கண பிழை உள்ளது என்று தொடுத்த மனு) மனுக்களையும் ஏற்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை ஓபன் - கோர்ட்டில் நடத்தப்பட இருக்கிறது. பொதுவாக வழக்கு விசாரணைகள், மூடிய அறையில் நடத்தப்படும். வழக்கிற்கு தொடர்புடைய நபர்கள் மட்டுமே இதை வந்து பார்க்க முடியும்.
ஆனால் ஓபன் - கோர்ட்டில் வழக்கு விசாரணையை யார் வேண்டுமானாலும் வந்து பார்க்க முடியும். விசாரணையை எப்போது வேண்டுமானாலும் வந்து பார்த்து விவரங்களை நேரிடியாக தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் இந்த வழக்கில் வெளிப்படைதன்மை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.