ரபேல் ஊழல் வழக்கு.. நீதிமன்றத்தில் உண்மைகளை மறைத்த மத்திய அரசு.. வெளியான புதிய ஆதாரம்!
ரபேல் ஒப்பந்தத்தில் முக்கிய ஆதாரங்களை பாஜக அரசு மறைத்து, நீதிமன்றத்தில் பொய் சொல்லி இருப்பது தெரிய வந்துள்ளது.
Recommended Video

டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தில் முக்கிய ஆதாரங்களை மத்திய அரசு மறைத்து, நீதிமன்றத்தில் பொய் சொல்லி இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான பரபரப்பு ஆதாரங்கள் வெளியாகி உள்ளது.
ரபேல் ஒப்பந்தம் நடந்த போது, பிரான்ஸ் அரசுடன் பிரதமர் அலுவலகம், தனியாக பேரம் பேசியது, சிலருக்காக பிரதமர் அலுவலகம் பேரம் பேசி இந்தியாவிற்கு இழப்பு ஏற்பட செய்தது என்று தி இந்து ஆங்கில பத்திரிகையில் பத்திரிக்கையாளர் என்.ராம் சில நாட்களுக்கு முன் எழுதி இருந்தார். இது தொடர்பாக தற்போது அவர் புதிய ஆதாரங்களை வெளியிட்டு உள்ளார்.
அதேபோல் இந்த ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் எப்படி கொண்டு வரப்பட்டது என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்து உள்ளார்.

ரிலையன்ஸுக்கு சென்றது
இந்த ரபேல் ஒப்பந்தத்தில் விதிகளை தளர்த்தி ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் ஆதாயம் அடையும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது. அதை வைத்தே ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தில் சேர்ந்துள்ளது. இது தொடர்பான ஆதாரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. விதிகளை தளர்த்தியதன் மூலம் 2 வாரம் முன்பு தொடங்கப்பட்ட கத்துக்குட்டி நிறுவனம் ஒன்றுக்கு (ரிலையன்ஸ் டிபன்ஸ்) இந்த ஒப்பந்தத்தை அளித்து இருக்கிறார்கள்.

அப்போதே சொன்னார்
இந்த ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை கொண்டு வந்தது டஸால்ட் நிறுவனம் கிடையாது, அது இந்திய அரசுதான் என்று புதிய ஆவணங்களின் படி தெரிய வந்து இருக்கிறது. இதைத்தான் சில மாதங்களுக்கு முன் முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே குறிப்பிட்டு இருந்தார். ரிலையன்ஸ் நிறுவனத்தை நாங்கள் கொண்டு வரவில்லை. இதை ஒப்பந்தத்தில் சேர்த்தது இந்திய அரசுதான் என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

கொடுக்க முடியாது
இந்த ஒப்பந்தத்தின்படி மொத்தம் அனைத்து ரபேல் விமானங்களும் வழங்குவதற்கு 7 வருடங்கள் ஆகும். அதிலும் கடைசி 7 வது வருடத்தில்தான் 50%க்கும் அதிகமான விமானங்கள் நமக்கு அளிக்கப்படும். இதனால் இந்த ஒப்பந்தம் காரணமாக இந்திய விமானப்படையும் வேகமாக வளராது, உடனடி பயன் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனையும்
இந்த ஒப்பந்தத்திற்கு பின் பிரதமர் அலுவலகம் தனிப்பட்ட பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறார். பிரதமர் அலுவலக பேச்சுவார்த்தைக்கு பின்தான் இந்த ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தனிப்பட்ட பேச்சுவார்த்தை என்பது முழுக்க முழுக்க இந்திய ஒப்பந்த விதிகளுக்கு எதிரானது ஆகும்.

மொத்தமாக மறைத்தனர்
ஆனால் இதை அனைத்தையும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விவரங்களில் மறைத்து இருக்கிறது. முக்கியமாக பிரதமர் அலுவலகம் நடத்திய தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளை நீதிமன்றத்தில் மத்திய அரசு மறைத்து உள்ளது. இப்போது வெளியாகி இருக்கும் புதிய ரபேல் ஆதாரங்கள் இந்த வழக்கில் புதிய திருப்பங்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications