ஆறுதலுக்கு பின் சண்டை.. மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுடன் கட்டிப்புரண்டு "மோதிய" ராகுல் காந்தி
டெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன பிரச்சனைகளுக்கு நடுவே மல்யுத்த வீரர்கள் தங்களின் விருதுகளை மத்திய அரசிடம் திரும்ப அளித்து வருகின்றனர். இந்நிலையில் தான் மல்யுத்த வீரர்களை சந்தித்து ஆறுதல் கூற போன ராகுல் காந்தி, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுடன் கட்டிப்பிடித்து உருண்டு செல்லமாக சண்டையிட்டார்.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் இருந்தார். இவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்றபோது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இழுத்து செல்லப்பட்டு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பதவி பறிக்கப்பட்டதோடு புதிதாக நிர்வாகிகள் தேர்வு செய்வதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார். பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளரான இவருக்கும் வீரர், வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ஓய்வை அறிவித்தார். இதையடுத்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பத்மஸ்ரீ விருதை திரும்ப ஒப்படைப்பதாக கூறி பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தின் அருகே விருதை வைத்துவிட்டு சென்றார். அதேபோல் மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங் பத்மஸ்ரீ விருதையும், வினோத் போகத் தனது விருதுகளையும் மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தனா் ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தின் சாரா கிராமத்தில் இன்று பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி பேசினார். இந்த வேளையில் ராகுல் காந்தி பஜ்ரங் புனியாவுடன் திடீரென்று மல்யுத்தம் விளையாடினார். அங்கு உள்ள மேடையில் ராகுல் காந்தியும், பஜ்ரங் புனியாவும் கட்டிப்பிடித்தபடி மல்யுத்தம் விளையாடினார். இருவரும் கட்டிப்பிடித்து உருண்டு சண்டையிட்டு கொண்டனர்.

இதுதொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த போட்டோவை ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார். அந்த பதிவில் அவர், ‛‛ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். இந்த வீரர்கள் மற்றும் இந்தியாவின் மகள்கள் அரங்கில் போராடுவதை விட்டுவிட்டு தங்கள் உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும் தெருவில் போராடினால் இனி வரும் காலங்களில் எந்த பெற்றோர் தங்களின் குழந்தைகளை இந்த போட்டியில் பங்கேற்க ஊக்குவிப்பார்கள்? இவர்கள் அப்பாவிகள். விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த எளிமையான மக்கள். அவர்கள் நாட்டின் தேசியக்கொடிக்காக சேவை செய்து இந்தியாவை பெருமைப்படுத்தட்டும்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications