சிறுபிள்ளைத்தனமான சேட்டை! பள்ளி மாணவர் பிறரை குற்றம் சொல்வது போல.. ராகுலை கேலி செய்த மோடி
டெல்லி: லோக்சபாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, நேற்று பள்ளி மாணவரை குறை சொல்வது போல ஒருவர் சிறுபிள்ளைத்தனமான சேட்டை செய்தார் என்று ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்தார். மேலும் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்திய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சிறுபிள்ளைத்தனம் என கருதி பொய்மையை கவனிக்காமல் விட முடியாது என்றும் கூறினார்.
லோக்சபாவில் பிரதமர் மோடி இன்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசினார். அப்போது எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக எதிர்க்கட்சிகள் அமளிகளுக்கிடையே மோடி உரையாற்றினார். அப்போது மோடி, நேற்று பள்ளி மாணவரை குறை சொல்வது போல ஒருவர் சிறுபிள்ளை தனமான சேட்டை செய்தார் என்று ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்தார்.

மோடி கூறியதாவது:- லோக்சபாவில் சிறுபிள்ளைத்தனமான சேட்டையை நாம் பார்த்தோம். பள்ளி மாணவர் பிறரை குற்றம் சாட்டுவது போல பேசினார்கள். (ராகுல் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக பேசினார்) ராகுல் காந்தி நேற்று நடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தினார். குறைந்தபட்ச ஆதார விலை, அக்னி வீர் திட்டம் குறித்து ராகுல் பொய்யான தகவல் கூறினார்.
நாட்டு மக்களை காங்கிரஸ் கட்சி தவறாக வழி நடத்துகிறது. மாதம் ரூ.8,500 வழங்குவதாக பொய்யை கூறியது காங்கிரஸ் கட்சி. பொய்யே காங்கிரஸ் கட்சியை அழித்துவிடும். ரஃபேல் குறித்தும், ஹெச்.ஏஎல் குறித்தும் ராகுல் காந்தி பொய் கூறினார். பொய்யின் பாதையில் மக்களை அழைத்து சென்று நாடாளுமன்றத்தை ஏமாற்ற முயற்சி செய்கிறார்கள்.
நாட்டில் கலவரங்களை தூண்டிவிட காங்கிரஸ் கட்சி முயற்சி செய்தது. எதிர்பார்த்த முடிவு வராததால் நாட்டில் கொந்தளிப்பு ஏற்படும் என அராஜகத்தை பரப்ப காங்கிரஸ் முயற்சி செய்கிறது. எமர்ஜென்சி மூலம் சர்வாதிகாரம் திணிக்கப்பட்டது. அவசர நிலையின் போது ஊடகங்கள் முடக்கப்பட்டு, அரசியல் சாசனம் ஒடுக்கப்பட்டது. நேருவின் அமைச்சரவையில் இருந்து அம்பேத்கர் ஏன் விலகினார் என்று கூற முடியுமா?..
ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தினார். நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்திய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். சிறுபிள்ளைத்தனம் என கருதி பொய்மையை கவனிக்காமல் விட முடியாது. காங்கிரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். லோக்சபாவில் ராகுல் காந்தி பேசியதை மக்கள் 100 ஆண்டுகள் ஆனாலும் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள்.
கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை ராகுல் காந்தி புண்படுத்திவிட்டார். இந்து மதத்தின் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்த சதி நடைபெறுகிறது. இந்துக்களை வன்முறையாளர்கள் என பேசுவது தான் உங்கள் கலாச்சாரமா?.. ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கு காரணமே இந்து மதம் தான். இந்துக்களை அவமதிப்பதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.
காங்கிரஸ் கட்சியின் நோக்கங்கள் மிகவும் கொடூரமானது. அரசியல் ஆதாயத்திற்காக இந்து மதத்தை அவமதித்து, கேலி செய்கிறது காங்கிரஸ் கட்சி. வாக்கு வங்கி அரசியல் தொடர்பான நடவடிக்கைகள் சரியானது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications