சாதிவாரி கணக்கெடுப்பு: அனுராக் விட்ட வார்த்தை.. பதிலடி கொடுத்த ராகுல்.. லோக்சபாவில் காரசார வாதம்
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவில் இன்று சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பான வாதத்தின் போது மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேசிய ஒரு வார்த்தை சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு உடனடியாக பதில் கொடுத்த ராகுல் காந்தி, அனுராக் தாக்கூர் என்னை துஷ்பிரயோகம் செய்து இழிவுபடுத்தியுள்ளார். அவர்கள் தொடர்ந்து இழிவுபடுத்தட்டும். நான் குரல் கொடுத்து கொண்டுதான் இருப்பேன் என்றார்.
நாடாளுமன்ற லோக்சபாவில் இன்று சாதி வாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக அனல் பறக்கும் வாதம் நடைபெற்றது. இந்த வாதத்தின் போது மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேசிய ஒரு வார்த்தை சலசலப்பை ஏற்படுத்தியது. அனுராக் தாகூர் பேசும் போது, "சாதி பற்றி தெரியாதவர்கள் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பேசுகிறார்கள்" என்றார். அனுராக் தாகூர் யாருடையை பெயரையும் குறிப்பிடாமல் இந்த கருத்தை சொன்னாலும் ராகுல் காந்தியை விமர்சிக்கும் விதமாகவே இந்த கருத்து பார்க்கப்பட்டது.

உடனடியாக ராகுல் காந்தி இதற்கு ரியாக்சன் கொடுத்தார். உடனே அவையில் எழுந்து பேசிய ராகுல் காந்தி, "ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரச்னைகளை யார் எழுப்பினாலும் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். நான் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். அனுராக் தாக்கூர் என்னை துஷ்பிரயோகம் செய்து இழிவுபடுத்தியுள்ளார். அவர்கள் தொடர்ந்து இழிவுபடுத்தட்டும். நான் குரல் கொடுத்து கொண்டுதான் இருப்பேன்" என்றார்.
லோக்சபாவில் 2024-25-ம் நிதி ஆண்டுக்கானபட்ஜெட் கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் ஆந்திரா, பீகாரை தவிர பிற எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இது தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எதிர்க்கட்சிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த பரபரப்புக்கு இடையே பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்து வருகிறது.
லோக்சபாவில் நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி பேசினார். அப்போது, மகாபாரத போரில் பயன்படுத்தப்பட்ட சக்கர வியூகத்தைப்போல மத்திய அரசு நாட்டில் சக்கர வியூகத்தை உருவாக்கி அனைவரையும் சிக்க வைத்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.
நாட்டில் அச்சம் நிறைந்த சூழல் நிலவுகிறது. இது நாட்டின் அனைத்து அம்சங்களிலும் பரவியுள்ளது. பாஜகவில் ஒருவர் மட்டுமே பிரதமர் கனவு காண அனுமதிக்கப்படுகிறார். ராணுவ அமைச்சர் பிரதமராக வேண்டும் என்றால் பெரிய பிரச்சினை, பயம் உள்ளது. இந்த அச்சம் நாடு முழுவதும் பரவி இருக்கிறது. பாஜகவில் உள்ள எனது நண்பர்கள், மந்திரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவரும் அச்சத்தில் இருப்பது ஏன்?
விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி, சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை இந்தியா கூட்டணி நிறைவேற்றும். நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டுக்கு முன்பு அல்வா தயாரிக்கும் புகைப்படத்தில் தலித், ஆதிவாசி அல்லது பிற்படுத்தப்பட்ட நபர் யாரும் இல்லை. நாட்டின் பட்ஜெட் தயாரிப்பில் 20 அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். அதில் ஒரேயொருவர் மட்டுமே சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர், ஒருவர் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்" என்று காட்டமாக பேசினார்.












Click it and Unblock the Notifications