ராகுல் காந்தி எம்பியாக தொடர்வார்..! "மோடி" பெயர் அவதூறு வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவால் நிம்மதி
டெல்லி: "மோடி" பெயர் குறித்து ராகுல் காந்தி பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றத்தின் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இதன் மூலம் ராகுல் காந்தி எம்பியாக தொடர்வார்.
கர்நாடகாவில் 2019 தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது.
கடந்த 2019 மக்களவை தேர்தலை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டது. அப்போது கர்நாடகாவில் கோலாரில் ராகுல் காந்தி பேசிய பேச்சு தான் அவருக்குப் பெரிய சிக்கலைக் கொடுத்தது.

கர்நாடகாவின் கோலர் பகுதியில் பிரசாரத்தின் போது பேசிய ராகுல் காந்தி, மோடி என்ற பெயர் வைத்த அனைவரும் ஒரே போல இருப்பதாகச் சொன்னார். மேலும், ஒரு சர்ச்சை கருத்தையும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தான் மோடி சமூகத்தையே இழிவுபடுத்திவிட்டதாகக் குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தான் ராகுல் காந்தியைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் சூரத் நீதிமன்றம் வழங்கியது.
இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ராகுல் காந்தி எம்பி பதியை இழந்தார். சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தது குஜராத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும், குஜராத் ஐகோர்ட்டிலும் ராகுலுக்கு எதிராகவே தீர்ப்பு வந்தது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இப்போது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தி எம்பி பதவியாகத் தொடர்வார் என்று காங்கிரஸ் தரப்பினர் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications