ஃபுட் பாய்ஸன் காரணமாக திடீரென டெல்லி திரும்பிய ராகுல் காந்தி.. இன்று மீண்டும் பிரச்சாரம் தொடக்கம்!
டெல்லி: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று முதல் மீண்டும் பிரச்சாரத்தை தொடங்குகிறார். கடந்த ஞாயிறு அன்று உடல் நலக்குறைவால் பொதுக்கூட்டத்தில் பங்கேற்காமல் டெல்லி திரும்பி இருந்தார் ராகுல்.
இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்ரல் 26ஆம் தேதி) நடக்கிறது. முதல் கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிமை தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் முதல் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இந்த வாரம் வெள்ளிக்கிழமை (26ஆம் தேதி) இரண்டாம் கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதில், கேரளா மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதிக்கும் தேர்தல் நடக்கிறது. நாளை மறுநாள் தேர்தல் நடைபெறும் இந்த 89 தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நாடு முழுவதும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஞ்சியில் இந்திய கூட்டணி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற இருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், நிகழ்ச்சியில் பங்குபெறாமலே டெல்லிக்கு திரும்பினார்.
பிரச்சார பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்திக்கு பதிலாக மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கி பேசினார். தான் போட்டியிடும் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தியால் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பங்கேற்க முடியவில்லை. இன்று பிரியங்கா காந்தி வயநாட்டில் பிரச்சாரம் செய்கிறார்.
தற்போது காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உடல் நலம் தேறி இருப்பதால், இன்று முதல் மீண்டும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்பார் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி உடல்நலம் தேறி வருவதால், அவர் இன்று முதல் மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அமராவதியில் பகல் 12.30 மணிக்கும், சோலாபூரில் பிற்பகல் 3.30 மணிக்கும் பொதுகூட்டங்களில் பங்கேற்கிறார்" என்று எக்ஸ் வலைத்தளத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications