"வயநாடு vs ரேபரேலி.." ராகுல் காந்தி ராஜினாமா செய்ய போகும் தொகுதி எது.. வெளியான பரபர தகவல்
டெல்லி: காங்கிரஸின் ராகுல் காந்தி கேரளா வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளிலும் வென்றுள்ள நிலையில், அவரது அடுத்தகட்ட திட்டம் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மை பெற முடியாத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது.

அதேநேரம் மறுபுறம் காங்கிரஸ் கட்சி இந்த முறை மொத்தம் 99 சீட்களில் வென்றது. கடந்த 2009க்கு பிறகு காங்கிரஸ் கட்சி இந்தளவுக்கு இடங்களில் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
ராகுல் காந்தி: இந்தத் தேர்தலில் காங்கிரஸ் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். கடந்த முறை வென்ற கேரள மாநிலம் வயநாட்டில் அவர் களமிறங்கினார். அதேபோல உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் அவர் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நமது நாட்டின் விதிகளின்படி, ஒரு நபர் இரண்டு இடங்களில் தேர்தலில் போட்டியிடலாம்.. ஆனால் இரண்டிலும் வெற்றி பெற்றுவிட்டால் இரண்டில் எதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஒருவரால் ஒரே நேரத்தில் இரு பதவியில் இருக்க முடியாது. ஒரு தொகுதியை மட்டுமே ஒரு நேரத்தில் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்பதே இதன் விதியாகும்.
இரண்டு தொகுதிகள்: ராகுல் காந்தி இப்போது இரண்டு தொகுதிகளிலும் வென்றுள்ள நிலையில், அவர் எதாவது ஒரு தொகுதியை ராஜினாமா செய்வார் என்றே கூறப்படுகிறது. அவர் ரேபரேலி தொகுதியைத் தக்க வைத்துக்கொண்டு கேரள மாநிலம் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்யலாம் என தகவல் வெளியானது. இருப்பினும், இதை யாரும் உறுதி செய்யவில்லை. இதற்கிடையே இப்போது இது குறித்து சில கூடுதல் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதாவது ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி என இரு தொகுதிகளுக்குமே அடுத்த வாரம் நேரில் சென்று அங்குள்ள மக்களைச் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னரே அவர் எந்த தொகுதியை ராஜினாமா செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அப்போது ராகுல் காந்தியுடன் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் உடன் செல்லலாம் எனக் கூறப்படுகிறது.
ராஜினாமா செய்யணும்: ராகுல் காந்தி இரண்டு வாரங்களில் இரண்டு தொகுதிகளில் ஒன்றில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். 17வது மக்களவை கலைக்கப்பட்டுள்ளது. இன்னும் 18வது மக்களவைக்கு இடைக்கால சபாநாயகர் நியமிக்கப்படவில்லை. எனவே, ராகுல் காந்தி தற்போதைய சபாநாயகர் ஓம் பிர்லாவுக்குக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்ப வேண்டும் எனக் கூறப்படுகிறது.
ராகுல் காந்தி ஒரு தொகுதியை ராஜினாமா செய்யத் தவறினால் அவர் இரண்டு தொகுதிகளையும் இழக்கும் அபாயம் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். எனவே, எந்தத் தொகுதியில் ராஜினாமா செய்வது என்ற முடிவை ராகுல் காந்தி அடுத்த வாரம் எடுப்பார் என்றே கூறப்படுகிறது.
வெற்றி: இந்த லோக்சபா தேர்தலில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி 6.47 லட்சம் வாக்குகளைப் பெற்று சுமார் 3.6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல உத்தரப் பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் 6.87 லட்சம் வாக்குகள் பெற்று சுமார் 3.9 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications