"ராகுல் காந்திக்கு ஆதரவு.." தேர்தல் நாளில் ட்விஸ்ட் கொடுத்த பிரசாந்த் கிஷோர்! பரபரக்கும் பீகார் களம்
டெல்லி: பீகார் மாநிலத்தில் இப்போது மும்முனைப் போட்டி நிலவுகிறது. என்டிஏ, இந்தியா கூட்டணி மற்றும் பிரசாந்த் கிஷோர் கட்சி போட்டியிடுகிறது. கடந்த காலங்களில் பிரசாந்த் கிஷோர் எப்போதும் காங்கிரஸையும் ராகுல் காந்தியையும் தொடர்ச்சியாக விமர்சித்தே வந்திருந்தார். இதற்கிடையே யாருமே எதிர்பார்க்காத வகையில் பிரசாந்த் கிஷோர் இப்போது ஒரு விவகாரத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவளித்துள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி கடந்த சில காலமாகவே வாக்கு திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறார். மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்கு திருட்டு நடந்துள்ளதாகச் சொல்லிக் குற்றஞ்சாட்டி வருகிறார். இதற்கிடையே நேற்று அவர் ஹரியானாவிலும் வாக்கு திருட்டு நடந்ததாகக் குற்றஞ்சாட்டினார்.

பிரசாந்த் கிஷோர் ஆதரவு
டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, ஹரியானாவில் எப்படி வாக்கு திருட்டு நடந்ததுள்ளது என்பதைச் சொல்லி விளக்கினார். இது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ராகுல் காந்திக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து சொல்லி வரும் நிலையில், பிரசாந்த் கிஷோர் இந்த விவகாரத்தில் ராகுல் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
ராகுல் காந்தி சொல்வது சரி
ஜன் சுராஜ் அமைப்பின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர் பீகார் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறார். அவர் காங்கிரஸின் இந்தியா கூட்டணிக்கு எதிராகவே பீகாரில் போட்டியிடுகிறார். இருப்பினும், அவர் ராகுல் காந்திக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் எழுப்பிய கேள்விகள் நியாயமானவை என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். அவர் மேலும், "தேர்தல் செயல்முறை குறித்து ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகள் நியாயமானவை.. தேர்தல் ஆணையம் இதற்குப் பதிலளித்தே தீர வேண்டும் என்றே நாங்களும் சொல்கிறோம்" என்றார்.
அதேநேரம் மகாராஷ்டிரா, ஹரியானாவைப் போல பீகாரிலும் தேர்தல் திருடப்படலாம் என ராகுல் காந்தி கூறியிருந்த நிலையில், அதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். அவர் மேலும், "பீகாரைப் பொறுத்தவரை, இங்குள்ள முக்கியப் பிரச்சனை அதுவல்ல. பீகார் தேர்தலில் உண்மையான பிரச்சனைகள் என்றால் அது பீகார் இளைஞர்கள் புலம்பெயர்வது, ஊழல் மற்றும் நமது குழந்தைகளின் கல்வி ஆகியவைதான்" என்றார்.
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
முன்னதாக நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ஹரியானாவில் ஆட்சி திருடப்பட்டுள்ளதாகவும் அங்கு வாக்களித்த 8ல் ஒரு வாக்கு போி வாக்குகள் என்றும் குற்றஞ்சாட்டினார். மேலும், ஹரியானாவில் பிரேசில் மாடல் ஒருவரின் போட்டோ ஸ்வீட்டி, சீமா, சரஸ்வதி எனப் பல்வேறு பெயர்களுடன் 22 முறை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினர். இதுபோல பல போலி வாக்குகள் இருப்பதாக அவர் சாடினார்.
மேலும் தேர்தல் ஆணையம் நினைத்தால் ஒரே நொடியில் போலி வாக்குகளை அகற்ற முடியும் என்றும் இருப்பினும் பாஜகவுக்கு உதவ அவர்கள் அதைச் செய்ய மறுப்பதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
பாஜக பதிலடி
ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக திட்டவட்டமாக மறுத்துள்ளது. பீகார் தேர்தலில் வெல்ல முடியாது என்பதாலேயே ராகுல் காந்தி இப்படிப் பேசி வருவதாக பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான கிரண் ரிஜிஜு பதிலடி கொடுத்துள்ளார். கர்நாடகா & தெலுங்கானாவில் காங்கிரஸும், தமிழ்நாடு & கேரளாவில் எதிர்க்கட்சிகள் வெல்லும்போது மட்டும் அங்கு வாக்கு திருட்டு நடைபெறவில்லையா என்று அவர் சாடினார்.












Click it and Unblock the Notifications