காங்கிரஸ் 70 ஆண்டுகளாக உருவாக்கியதை... பாஜக 7 ஆண்டுகளில் விற்றுவிட்டது -ராகுல் காந்தி
டெல்லி: காங்கிரஸ் கடந்த 70 ஆண்டுகளாக நாட்டின் உட்கட்டமைப்புக்காக உருவாக்கி வைத்ததை பாஜக ஏழே ஆண்டுகளில் விற்றுவிட்டதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர் இந்தக் கருத்தை பதிவு செய்தார்.

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது அனைத்து ஊடகங்களும் பிரதமர் மன்மோகன் சிங்கை பலவீனமானவர் என்று விமர்சித்ததாகவும் ஆனால் புல்வாமா தாக்குதலின் போது பிரதமர் மோடிக்கு எதிராக ஒரு ஊடகம் கூட வாய்திறக்கவில்லை எனவும் சாடினார். ஊடகங்கள் பாகுபாடுடன் நடந்துகொள்வதாக அவர் வேதனை தெரிவித்தார்.
பாரதிய ஜனதா அரசின் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக எந்த கேள்வியும் எழுப்பாமல் ஊடகங்கள் அமைதிகாத்து வருவதாகவும் அதே வேளையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சி செய்த போது ஊடகங்கள் தொடர்ந்து விமர்சித்து வந்ததாகவும் ராகுல் கூறியிருக்கிறார்.
விமானநிலையம் தனியார்மயம், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம், ரயில்நிலையங்கள் தனியார்மயம் என மத்திய அரசின் கொள்கை முடிவுகளை கடுமையாக விமர்சித்த ராகுல், பாஜக அரசின் நடவடிக்கைகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் முழுமையாக இரண்டரை ஆண்டுகள் மட்டுமே உள்ளதால், இப்போதே அது தொடர்பான பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் ராகுல். கட்சியின் பல மட்ட நிர்வாகிகளையும் அவ்வப்போது சந்தித்து பேசி வரும் இவர், விரைவில் மாநிலங்கள் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் கட்சியில் இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ் போன்ற சார்பு பிரிவுகள் வலிமையாக உள்ளதை போல் மாணவர் காங்கிரஸையும் வலிமைப்படுத்தும் நோக்கில் அந்த அணியின் நிர்வாகிகளுக்கு பல்வேறு கட்சி வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆலோசனைகளை நல்கினார் ராகுல்.
பஞ்சாப், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் பணிகளிலும் ராகுல் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications