பிரதமர் மோடியை நானும் அன்புமணியும் சந்தித்தது ஏன்.. ராமதாஸ் விளக்கம்
Recommended Video
டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சந்தித்து பேசினர்.
அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது பாட்டாளி மக்கள் கட்சி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணியில் பெற்ற பாமக எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
அதேநேரம் அதிமுகவுடனான கூட்டணி ஒப்பந்தப்படி, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.
ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் பாஜக கூட்டணியில் இடம் பெற்று இருந்தாலும் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள். சேலம் எட்டுவழிச்சாலை, ஷேல் கேஸ் திட்டம், உள்பட பல்வேறு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதேபோல் தமிழக நலன் சார்ந்த பல்வேறு கோரிக்களை மத்திய அரசுக்கு அடிக்கடி ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர்.
7 தமிழர் விடுதலை, காவிரி - கோதாவரி ஆறுகள் இணைப்பு , காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியை, நானும் அன்புமணி ராமதாசும் சந்தித்தோம் என்று ராமதாஸ் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.