ஒரே நாளில் ரூ.1.45 லட்சம் கோடி.. இந்தியாவில் 5ஜி ஏலம் பரபர! நிறுவனங்கள் போட்டா போட்டி - செப்.ல் சேவை
டெல்லி: இந்தியாவில் நேற்று 5ஜி அலைவரிசைக்கான ஏலம் தொடங்கி இருக்கும் நிலையில், முதல் நாளிலேயே ரூ.1.45 லட்சம் கோடி வரை நிறுவனங்கள் ஏலம் கேட்டு இருக்கின்றன.
இந்தியாவில் 5ஜிக்கான ஏலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கேபினட் குழு கடந்த மாதங்களுக்கு முன்பாக ஒப்புதல் வழங்கியது.
உலகம் முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் செல்போன் தொழில்நுட்பம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சியடைந்து இருக்கிறது.

5ஜி அலைவரிசை
வளர்ச்சிக்கு இணையதள வேகத்தை அதிகரிக்க அலைவரிசையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 5ஜி அலைவரிசை மூலம் சேவைகள் கிடைத்தால் தற்போது அமலில் உள்ள 4ஜி அலைவரிசையை விட 10 மடங்கு அதிக வேகத்தில் இணையதள வசதிகளும் 3ஜியை விட 30 மடங்கு அதிக வேகத்தில் இணைய வசதிகளும் நமக்கு கிடைக்கும். இந்தியாவில் 5ஜி சோதனை சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.

5 ஜி ஏலம்
இந்த நிலையில் நேற்று 5ஜி அலைவரிசைக்கான ஏலம் தொடங்கியது. பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் - ஐடியா, அதானி குழுமம் ஆகிய 4 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்குபெற்றன. முதல் நாளான நேற்று 4 சுற்றுகளாக 5ஜி ஏலம் நடைபெற்று உள்ளது. இந்த ஏலத்தில் 4 நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியதாக மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து இருக்கிறார்.

ஆர்வம் காட்டிய நிறுவனங்கள்
இந்த ஏலத்தில் 600, 700, 800, 900, 1800, 2100, 2300, 2500, 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகா ஹெர்ட்ஸ் பேண்டுகள் இடம்பெற்று உள்ளன. இதில் குறிப்பாக 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகா ஹெர்ட்ஸ் அலைவரிசையை வாங்க கடுமையாக போட்டியிட்டதாக அவர் கூறி உள்ளார். அதேபோல் 700 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையை வாங்கவும் அவர்கள் ஆர்வம் காட்டியதாக அவர் தெரிவித்தார்.

ஏலத்தில் சாதனை
முதல் நாள் ஏலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரை நிறுவனங்கள் ஏலம் கேட்டு உள்ளதாகவும், இது கடந்த 2015 ல் நடைபெற்ற 4ஜி ஏலத்தின் சாதனையை முறியடித்து இருப்பதாகவும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இது அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிய தொகை என அவர் தெரிவித்துள்ளார். இந்த ஏலத்துக்காக 4 பெரிய நிறுவனங்கள் மொத்தம் ரூ.21,400 கோடியை வைப்புத்தொகையாக வைத்துள்ளன.

செப்டம்பரில் சேவை
5ஜி அலைவரிசையை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணியை ஆகஸ்டு 14 ஆம் தேதிக்கும் மத்திய அரசு செய்துவிடும் என்றும், செப்டம்பர் மாதத்தில் 5ஜி சேவைகள் தொடங்கும் எனவும் அவர் கூறி இருக்கிறார். விதிகளின் படி 5ஜி அலைவரிசை ஏலத்தின் விபரங்களையும் எந்த நிறுவனம் இதில் முன்னிலையில் உள்ளது என்பதையும் ஏலம் முடியும் வரை வெளிப்படுத்தக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications